https://reg.unog.ch/event/19412/overview
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் போய்ப் பேசுவது என்பது பற்றித்தான் இப்போது பேச்சாக இருக்கிறது. வைகோ, டேனியல் காந்தி என பலரும் இது போல் அறிக்கையைப் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
அந்த வகையில், இது ஒன்றும் ஐ.நா. அவையின் அழைப்பு அல்ல, நீங்களும் சென்று கலந்து கொள்ளலாம் என்பதுதான் இதன் முக்கியச் செய்தி.
கடந்த வருடம் டேனியல் காந்தி என்ற திருமுருகன் காந்தி ஐ.நா. அவையில் சென்று பேசிவிட்டு வந்தேன் என்றும், தாம் இந்திய மண்ணில் இறங்கியதும் அதற்காக கைது செய்யப் பட்டேன் என்றும் புலம்பித் தீர்த்ததை யாரும் மறந்துவிட முடியாது!
மேலும், இது ஒன்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் அதி முக்கிய கூட்டமும் அல்ல! காமா சோமா என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
இப்படி இருக்கக் கூடிய ஒரு சாதாரண நிகழ்வுக்கு பெரிய அளவில் பில்டப் கொடுத்து, ஸ்டாலினுக்காக திமுக.,வினரும், திமுக., சார்பு கட்சி ஊடகங்களும் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கின்றன என்பது தற்போது முன்வைக்கப் படும் குற்றச்சாட்டு!
இது குறித்து, பாமக., வின் ர.அருள் குறிப்பிட்டவை…
ஊடகங்களின் பொய்களில், நம்பமுடியாத பேரதிர்ச்சியாக “காஷ்மீர் பிரச்சனையில் ஸ்டாலின் எடுத்த நிலைப்பாடு பெரிய அளவில் கவனம் பெற்றதால்தான் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது ஐநா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும், “ஐநா சபையில் அவர் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், ஈழத்தை குறித்தும் பேசுவார்” என்றெல்லாம் அட்டகாசமாக கதை விடுகிறார்கள்! ஆனால், இவை எதுவுமே உண்மை இல்லை! இவை அனைத்தும் முழுக்க முழுக்க ‘ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்கள்’ ஆகும்.
# உண்மை 1: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு எதுவும் ஐநா அவையால் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்படவில்லை.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Association Bharathi Centre Culturel Franco-Tamoul எனும் ஐநாவால் அங்கீகரிகப்பட்ட NGO மூலமாக, மு.க. ஸ்டாலின் இக்கூட்டத்தில் பார்வையாளராக (Observer) பங்கேற்க பதிவு செய்துள்ளார். அதற்காக சாதாரணமான Acknowledgement வந்துள்ளது. அதைத்தான் ஐநா அழைப்பு என உதார் விடுகிறார்கள்.
# உண்மை 2: உலகத்தலைவர்கள் வரிசையில் ஐநா மன்றம் மு.க. ஸ்டாலினை அழைத்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிடுவது பொய்; வெட்கம் கெட்ட செயல்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் உலகத்தலைவர்கள் பட்டியலின் கீழ், பிரதமர்கள், அதிபர்கள், அமைச்சர்கள் தான் பேசுவார்கள். அத்தகைய பொறுப்புகள் எதிலும் இல்லாத மு.க. ஸ்டாலினை இந்த பட்டியலின் கீழ் பேச விடுவதற்கான வாய்ப்பே இலை.
# உண்மை 3: காஷ்மீர் பிரச்சனைக்காகவும் ஈழத்தமிழர் பிரச்சினைக் காகவும் மு.க. ஸ்டாலினை அழைத்துள்ளார்கள் என்பதெல்லாம் – உலகமகா டுபாக்கூர் கற்பனை!
ஐநா மனித உரிமைகள் பேரவை என்பது முன்னதாகவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் நடப்பதாகும் HRC42-Programme of work நிகழ்ச்சி நிரல் இதோ: https://www.ohchr.org/EN/HRBodies/HRC/RegularSessions/session42/Documents/POW_HRC42_E.doc
இந்த 42 ஆம் கூட்டத்தில் ஏமன், சூடான், மியான்மர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கம்போடியா, சோமாலியா, காங்கோ, தெற்கு சூடான்,புரூண்டி, காசா, வெனிசுவேலா, நிகராகுவா, சிரியா, லிபியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் விவகாரங்கள் தான் பேசப்படவுள்ளன. இலங்கை விவகாரமோ, காஷ்மீர் விவகாரமோ இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இல்லை (காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையரின் தொடக்க அறிக்கையில் மேலோட்டமாக குறிப்பிடப்படும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதன் மீது விவாதம் எதுவும் இல்லை).
உண்மை இவ்வாறு இருக்கையில், டைம்ஸ் ஆப் இந்தியா, ஒன் இந்தியா, நியூஸ் 18, மின்னம்பலம் ஆகிய ஊடகங்கள்! ஐநா மனித உரிமைகள் பேரவையில், உலகத் தலைவர்கள் வரிசையில் மு.க. ஸ்டாலின், காஷ்மீர் மற்றும் இலங்கை விவகாரம் குறித்து பேசப்போகிறார் என உச்சக்கட்ட போலிச்செய்தியை (Fake News) பரப்புவது ஏன்?
“Accuracy and Fairness: The Press shall eschew publication of inaccurate, baseless, graceless, misleading or distorted material. All sides of the core issue or subject should be reported. Unjustified rumours and surmises should not be set forth as facts” – என்கிற இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டு நெறிகளை டைம்ஸ் ஆப் இந்தியா, ஒன் இந்தியா, நியூஸ் 18, மின்னம்பலம் ஆகிய ஊடகங்கள் பின்பற்றும் லட்சணம் இதுதானா?
பின்னணி: மு.க. ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை சார்பில் எந்த அழைப்பும் அனுப்பப்படவே இல்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுகவினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் ஒப்புகை சீட்டை வைத்துக்கொண்டு, “ஐநா சபையே மு.க. ஸ்டாலினை அழைத்தது” என கதை கட்டுகிறார்கள்! ஆனால், இவர்கள் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டிலேயே, அது அழைப்பு அல்ல. கணினியில் தானாக உருவாக்கப்பட்ட சான்று மட்டுமே என்று கூறியுள்ளார்கள் (This is not an invitation but a confirmation of registration generated automatically). (இது விசா விண்ணப்பத்திற்கு மட்டும் தான் உதவும்).
உண்மையில், ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், பேசவும், துணைக் கூட்டம் நடத்தவும் ஐநா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகளுக்கு அனுமதி உண்டு. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அத்தகைய ஒரு அமைப்பு ஆகும் (NGO in Special Consultative with the United Nations ECOSOC).பசுமைத் தாயகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும், மு.க. ஸ்டாலினுக்கு வந்தது போன்ற கடிதம் வரும். (HRC 42பதிவு செய்யும் இணைப்பு இதோ: https://reg.unog.ch/event/19412/
ஐநா மனித உரிமைகள் பேரவை 42 ஆம் கூட்ட Acknowledgement கடிதம் பாமகவின் கோவை அசோக் ஸ்ரீநிதிக்கும் வந்துள்ளது. அதே போன்று,பிரான்சில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul எனும் ஒரு NGO சார்பில் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதற்கான ஒப்புதல் சீட்டை ஐநாவின் கம்ப்யூட்டர் தானாக அனுப்பியுள்ளது (confirmation of registration generated automatically). அதை வைத்து திமுகவினர் கம்பு சுத்துகிறார்கள்.
மேலும், நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த விவாதம் இடம்பெறவில்லை. ஈழத்தமிழர் விவகாரம் அடுத்த ஆண்டு 2020 மார்ச் மாதம் நடைபெறும் 43 ஆவது கூட்டத்தில் தான் வர இருக்கிறது. இந்நிலையில், “உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐநா சபை அழைத்துள்ளது” என்றும், கூட்டத்தின் அஜெண்டாவிலேயே இல்லாத “ஈழத்தமிழர் விவகாரம் குறித்து மு.க. ஸ்டாலின் பேசுவார்” என்றும் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் திமுக., சார்பு ஊடகங்கள் எழுதுகின்றன….! – என்று குறிப்பிடுகிறார் ர.அருள்.
எனவே நீங்கள் யாரேனும் ஐ.நா. சபைக்குச் சென்று இது போல் பேச விரும்பினால்… நீங்களும் அப்ளிகேஷன் போடுங்க… அப்ரூவல் வாங்குங்க… அசத்துங்க… உங்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லையே என்று கவலை வேண்டாம்..! நாங்கள் இருக்கிறோம்!