சமூக வலைதளம் மூலம் காதலித்த பாகிஸ்தான் பெண்ணைப் பார்க்க ஊரடங்கையும் மீறி மகாராஷ்டிரா கல்லூரி மாணவர் 1200 கிலோமீட்டரை சைக்கிளிலும், பைக்கிலும் கடந்து பின்னர் கைதாகியுள்ளார்.
அலகாபாத்தை பூர்விகமாக கொண்ட ஜீஷன் சித்திக் என்ற 20 வயது கல்லூரி மாணவர், சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பெண்ணிடம் காதல் வயப்பட்டுள்ளார். காதலியை காண சேஷான் கடந்த 11-ஆம் தேதி சைக்கிளில் வீட்டைவிட்டு புறப்பட்டு 225 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளார்.
அகமதுநகரில் பைக் ஒன்றை ஏற்பாடு செய்த அவர் குஜராத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையான கட்ச் வரை பயணித்தார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவரை குஜராத்தில் எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கூகுள் வரைபடத்தில் வழியை பார்த்து காதலியை காண சென்றதாகவும் அந்த 20 வயது காதலர் கூறியுள்ளார். குற்ற நடவடிக்கை எதுவும் செய்யாத இளைஞரை போலீசார் ஊரடங்கு மீறலுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு பின்னர் அவரை விடுவித்தனர்.