வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டார்.
வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்லாத பிளஸ்2 ‘சி’ பிரிவு மாணவர்கள், தங்கள் வகுப்பறையில் உள்ள இரும்பாலான மேசை, நாற்காலி, பென்ச்களை உடைத்து நொறுக்கினர். இதையறிந்து அங்கு வந்த ஆசிரியர்கள், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். அதற்கு அந்த மாணவர்கள், ஆசிரியரை மிரட்டலாக பார்த்ததுடன் தாக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் அவர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தொரப்பாடி பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் பென்ச் உடைப்பில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
+2 மாணவர்கள் 10 பேரை மே 5-ம் தேதி வரை பணிநீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்த ஆட்சியர் மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது ,மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்