விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்;
“தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 -ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 – 2023ஆம் கல்வியாண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கடந்த மாதம் 21-ம் தேதி முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவானது. 2021 – 2022-ம் கல்வியாண்டில் கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது.
இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விட கூடுதலாகும். குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1, 2 ஆகிய இரு நாட்கள் “எண்ணும் எழுத்தும்” பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6 முதல் 10-ம் தேதி வரையில் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதி வழங்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.