Home இந்தியா தெருச் சண்டையில் எவர் பக்கம் நியாயம் இல்லையோ அவரே எதிராளியின் தாயைப் பழிப்பார்… காங்கிரஸின் இன்றைய...

தெருச் சண்டையில் எவர் பக்கம் நியாயம் இல்லையோ அவரே எதிராளியின் தாயைப் பழிப்பார்… காங்கிரஸின் இன்றைய நிலை அதுதான்!

தெருவில் நடக்கும் சண்டையில் எவர் பக்கம் நியாயம் இல்லையோ, அவரே எதிராளியின் தாயை உடனே பழிக்கத் தொடங்குவார். இன்றைய காங்கிரஸ் கட்சிக்காரர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது என்று கூறினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், தாம் யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. என்றும்,  ஒருவர் வகிக்கும் பதவிக்கான செயல்பாடுகள் குறித்தே விமர்சிக்கிறோம் என்றும் கூறிய மோடி, *எனது தாய், தந்தை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறது காங்கிரஸ் கட்சி என்று கடுமையாக சாடினார்.

தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர், தற்போது தன் தாயைப் பழிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தார்பூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை “மாமா” என அவதூறு செய்பவர்கள்,. தங்கள் சொந்த “மாமாக்களான” குவாத்ரோச்சி, வாரண் ஆண்டர்சன் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும்! போபர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய குவாத்ரோச்சியும், போபால் விஷவாயு கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாரண் ஆண்டர்சனும் சிறப்பு விமானத்தில் தப்பிச் செல்ல காங்கிரஸ் உதவியது…

நான்கு தலைமுறை காங்கிரஸ் ஆட்சியையும், தேநீர் வியாபாரியான எனது 4 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்…எம் ஆட்சியில் நாடு புதிய உச்சங்களை தொட்டிருக்கிறது… என்றார் மோடி.

மேலும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜ் பாப்பர், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மோடியின் தாயார் வயது அளவுக்கு சரிந்துள்ளது என்று விமர்சனம் செய்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,. தெருச் சண்டையின்போது யார் பக்கம் நியாயமில்லையோ அவர்கள் எதிராளியின் தாயாரை பற்றி வசை பாடுவதைப் பார்த்திருக்கலாம்! அதுபோல் என்னுடன் மோதும் துணிச்சலை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சியினர் என் தாயைப் பழிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சோனியா காந்தியையும் ஒரு பிடி பிடித்தார். அவர் பெயரைக் குறிப்பிடாமல், தாங்கள் ஒன்றும் மேடம் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கும் ஆட்சி அல்ல என்று கூறிய மோடி, இந்திய மக்கள்தான் எங்களுக்கு மேலிடம் என்றார்.

பிறக்கும்போது கையில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். அவர்களது கட்சியோ ஃபியூஸ் போய்விட்டது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ப்யூஸ் போன பல்பு என மறைமுகமாகக் குற்றம் சாட்டினார் மோடி.

15 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசை தோற்கடித்தவர்கள், மீண்டும் அந்த ஆட்சியினால் தங்கள் வாரிசுகள் அவதிப்பட அனுமதிக்கப் போகிறார்களா? என மோடி கேள்வி எழுப்பினார். அப்படிப்பட்ட நிலையை தாங்கள் விரும்பவில்லை என்பதை நிரூபிக்க பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version