கர்நாடக முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள பி எஸ் எடியூரப்பா இன்று கர்நாடக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கு கோரவுள்ளார்.
இந்நிலையில் தனக்கு மிகவும் விருப்பமான பெங்களூருவில் உள்ள ஸ்ரீ பால வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அதிகாலை சென்று பிரார்த்தனை செய்தார் எடியூரப்பா.
இதனிடையே, பாஜக., ஆட்சி அமைந்துள்ளதால் காங்கிரஸை சேர்ந்த சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் இன்று தன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பவனில் அவைத்தலைவர் ரமேஷ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டசபையில் நான் ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் நிதி மசோதா ஒப்புதல் பெற வைப்பது என் கடமை. சட்டசபை சபாநாயகர் இருக்கையில் அமருவேன். அதன் பின் நடக்கும் நிகழ்வுகளை அனைவரும் அறிந்து கொள்வீர்கள்.
சட்டசபையில் நிறைய பேச வேண்டியுள்ளது. 23ஆம் தேதியே பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை என் சட்டைப்பையில் வைத்திருந்தேன். காரணம், அப்போதைய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திப் போட்டால் என் மீது தவறான கண்ணோட்டம் வந்துவிடும் அது வரக்கூடாது என்பதற்காக நான் என் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தேன். நான் நாடகமாடவில்லை. அந்த வலி எனக்குத்தான் தெரியும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகவும், நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்காகவும் இரண்டு நாள் சட்டசபை கூட்டத்தொடர் அழைக்கப்பட்டுள்ளது.
இன்று கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, சனி ஞாயிறு விடுமுறை நாள் என்று கூடப் பாராமல் ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தக் கூட்டத் தொடர் முடிவில் அவைத்தலைவர் பதவியை ரமேஷ் குமார் ராஜினாமா செய்வார் என கூறப் படுகிறது.
இன்று கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் பெரும் காரசார அடிதடி ரகளை எதிர்பார்க்கப் படுகிறது. 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் ஏற்பு, தொடர்ந்து, பெரும்பான்மை பலத்துக்கான இடம் குறைவு, அதனால் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை பாஜக., பெற்றிருப்பது என பல்வேறு திருப்பங்கள் கடந்த ஓரிரு நாட்களில் கர்நாடகத்தில் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Karnataka CM, BS Yediyurappa offers prayers at Bengaluru’s Sri Bala Vera Anjaneya temple; his government to prove majority in Karnataka Assembly today. pic.twitter.com/iCfxLuEL9Q
— ANI (@ANI) July 29, 2019