தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய: – முற்பகல் நிழல், பிற்பகல் நிழல்.
பூர்வாஹ்னம் – சூரியோதயத்திலிருந்து ப௧ல் 12 மணி வரை. அபராஹ்னம் – பகல் 12 மணியிலிருந்து மாலை வரை
சாயா – நிழல்
சூரியன் உதயமான பின் சூரிய கிரணங்கள் எந்த கோணத்தில் விழுகின்றன எனபதைப் பொறுத்து நம் நிழல் பூமியின் மேல் விழுகிறது. ‘பூர்வாஹ்னம்’ எனப்படும் முற்பகலில் நம் நிழல் மிகவும் நீளமாக விழுகிறது. நேரம் ஆக ஆகக் குறைந்து, சூரிய பகவான் தலைக்கு மேல் வரும்போது (அபிஜித் லகனம் பகல் 12 மணி) நிழல் முடிவடைகிறது. அப்போதிலிருந்து நிழல் சிறிது சிறிதாக வளர்ந்து மாலையில் மிகவும் பெரிதாகத் தெரிகிறது. இது அபராஹ்ன சாயை – பிற்பகல் நிழல்.
கவிஞர்கள் இந்த இரண்டு நிழல்களையும் ஆராய்ந்து பார்த்துக் கூறியது தான் இந்த நியாயம். நட்பும் தொடர்பும் சிறிது சிறிதாக வளர்ந்து வர வேண்டும் என்ற செய்தியை இந்த இயற்கை நியதியிலிருந்து நாம் அறிய வேண்டும்.
நல்லவர்களோடு கொண்ட நட்பு சிறிது சிறிதாக வளர்ந்து நிலைத்து நிற்கும் என்பது சான்றோர் கூற்று. மனிதனுக்கு ஏற்படும் அறிமுகங்கள் உயிர்த் தோழமையாக மாற வேண்டும் என்பது கருத்து. இதனை மத்தியான நிழலோடு ஒப்பிடுகிறது இந்த நியாயம். சுயநலத்தோடு ஆரம்பமாகும் நட்புகள் ஆர்பாட்டமாகத் தொடங்கி, குறைந்து கொண்டே போகும்.
புகழ் பெற்ற சமஸ்கிருத கவிஞர் ப்ரத்ருஹரி, சிநேகத்தை நிழலோடு ஒப்பிட்டு இவ்வாறு கூறுகிறார்.
ஆரம்ப குரவீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புராவ்ருத்திமுபைதி பஸ்சாத் |
தினஸ்ய பூர்வார்த்த பரார்த்த பின்னா
சாயேவ மைத்ரி கல சஜ்ஜனானாம் ||
பொருள் – காலையில் விழும் நிழலைப் போல கீழானவர்களின் சிநேகம், தொடக்கத்தில் பெரியதாகத் தோன்றி, சிறிது சிறிதாகக் குறைந்து விடும். நல்லவர்களின் சிநேகம் அவ்வாறின்றி முதலில் சிறியதாகத் தொடங்கி, மத்தியான நிழலைப் போல சிறிது சிறிதாகப் பெரிதாக வளரும்.
உயர்ந்த நோக்கமும் சுயநலமற்ற குணமும் உடையவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும் என்பது இந்த நியாயம் அளிக்கும் செய்தி. சுயநலத்திற்காகச் செய்யும் சிநேகம் நீண்ட நாள் நிற்காது. நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டிய குனங்களை பர்த்ருஹரி இவ்வாறு விவரிக்கிறார்.
பாபான்னிவாரயிதி யோஜயதே ஹிதாய
குஹ்யம் நிகூஹதி குணான் பிரகடீகரோதி |
ஆபத்கதஞ்ச ந ஜஹாதி ததாதி காலே
சந்மித்ர லக்ஷணமிதம் ப்ரவதந்தி ஸந்த: ||
பொருள் – தீமை செய்யாமல் நண்பனைத் தடுப்பது, நல்ல செயல்கள் செய்யும்படி நண்பனை உற்சாகப்படுத்துவது, வெளியில் சொல்லக் கூடாத விஷயங்களை ரகசியமாக வைப்பது, நண்பனிடமுள்ள நல்ல குணங்களைப் புகழ்ந்து எல்லோருக்கும் சொல்வது. ஆபத்தில் நண்பனை விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவைப்படும் போது நண்பனுக்கு உதவுவது.
இப்படிப்பட்ட குணங்களை பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் இப்படிப்பட்ட நண்பர்களை முயற்சித்து அடைவதற்கும் இந்த ஸ்லோகம் உற்சாகமளிக்கிறது.
இந்த நியாயத்தில் ‘பூர்வாஹ்ன சாயை’ போல ஆடம்பரமாகத் தொடங்கும் நட்புக்கு உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணன்- துரியோதனன் நட்பை ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. மகாபாரதம் ஆதிபர்வம் 135 வது அத்தியாயத்தில் கர்ணனை அறிமுகப்படுத்தும் கட்டத்தில், அவர்கள் இருவரின் நட்பு முதல் பார்வையிலியே ஆரம்பாமாகி பூர்வாஹ்ன சாயை நியாயத்தில் கூறப்படும் சிநேகம் போல எவ்வாறு மாறியது என்பது விவரிக்கப்படுகிறது.
அரச குமாரர்கள் அஸ்திரப் பயிற்சியைக் காட்டும் தருணம். அர்ஜுனன் மிகச் சிறப்பாக கத்தி. வில், கதை முதலான ஆயுதங்களால் பல வியூஹங்களைச் செய்து காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினான். குறி பார்த்தான். துரியோதனனுக்கு பயம் ஏற்பட்டது. அவன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது. அர்ஜுனனின் மேல் அசூயை ஏற்பட்டது. அதே நேரம் களத்தில் இறங்கினான் கர்ணன். எல்லாப் புறமும் கண்களைத் திருப்பி, துரோணாசாரியாரையும் கிருபாசாரியாரையும் அலட்சியமாக நோக்கி, வணக்கம் தெரிவித்தான். (ப்ரணாமம் க்ருபயோ: நாத்யத்ருதி மிவாகரோத்). மேகம் போல் கம்பீரமான குரலில் முன் எப்போதும் பார்த்திராத அர்ஜுனனை உத்தேசித்து, நீ செய்து காட்டிய வித்தைகளை விடச் சிறப்பான வித்தைகளை நான் செய்வேன் என்று கர்ஜனை செய்தான். அரசனல்லாதவனோடு நான் போட்டியிடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அப்போது துரியோதனின் துர்புத்தி விழித்தது. அர்ஜுனனுக்குப் போட்டியாக வரக் கூடியவனை தேடிக்கொண்டிருந்த துரியோதனனுக்கு கர்ணன் கிடைத்தான். அந்த சுயநலத்தால் கர்ணனை அங்க ராஜ்ஜியத்திற்கு அதிபதியாக அபிஷேகம் செய்தான். ‘பூர்வாஹ்ன சாயை’ போல அவர்களின் நட்பு அட்டகாசமாகத் தொடங்கியது.
துரியோதனன் மகிழ்ச்சியோடு கர்ணனிடம், ‘அத்யந்தம் சக்யமிச்சாமி’ என்றான். நல்ல நண்பனுக்கு இருக்கவேண்டிய ஒரு நல்ல குணம் கூட இல்லாதவனான கர்ணன் தனக்கிருக்கும் குறைகளை எப்போதுமே துரியோதனனிடம் வெளிப்படுத்தவில்லை. திரௌபதியின் துகிலுரிப்பு நேரத்தில் அது தவறு என்று நண்பனுக்கு எடுத்துக் கூறவில்லை. முக்கியமான நேரத்தில் பீஷ்மரோடு தகராறு செய்து தன் அகம்பாவத்தால் அநாவசியமாகக் காலத்தை வீணடித்தான் கர்ணன். குந்திக்குக் கொடுத்த வாக்கை ரகசியமாக வைத்திருந்தான். அதன் பின் அவர்களின் நட்பால் ஏற்பட்ட கொடூரத்தை நாமறிவோம். அவர்களுடைய நட்பு சுயநலத்தால் ஏற்பட்டது.
சுயநலமான நட்புக்கு மற்றுமொரு உதாரணம் பிரிட்டிஷ் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தோடு செய்த கபட நட்பு. அந்த நட்பு முஸ்லீம் சமூகத்திற்கு நன்மை செய்ய வில்லை. பாரத தேசத்திடம் பகை கொள்ளாமலிருந்தால், ஹிந்துகளைக் கொன்று கோவில்களை இடித்து துவம்சம் செய்யாமல் இருந்தால், இந்தியர்களுக்கு இன்றைய பாகிஸ்தான் ஒரு சிறந்த யாத்திரைத் தலமாக இருந்திருக்கும். பிரிட்டிஷாரின் பேச்சைக் கேட்டு தேசத்தை துண்டு துண்டாக்கி, இன்று பல இன்னல்களைச் சந்திக்கிறது பாகிஸ்தான். கூடா நட்பால் வந்த விளைவு இது.
கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான சிநேகம் உயர்ந்த லட்சியத்தோடு கூடியது. தர்மத்தை ரட்சிப்பதற்காக ஏற்பட்டது. ‘அபராஹ்ன சாயை’ நியாயத்திகு இது எடுத்துக்காட்டு. தான் தேர்ந்தெடுத்த நண்பனின் மூலம் வேதாந்த ஞானம் கிடைக்கப் பெற்றான் அர்ஜுனன்.
‘க்ருண்வந்தோ விஸ்மார்யம்’ என்ற உயர்ந்த எண்ணத்தோடு பாரத தேசம் உலகில் பல தேசங்களோடு நட்பு கொண்டுள்ளது. முக்கியமாக அகதிகளாக நம் தேசத்திற்கு வந்த யூதர்களுக்கு மிகவும் கௌரவத்தோடு அடைக்கலம் கொடுத்தது. இஸ்ரேல் தேசம் ஏற்பட்டபின் அவர்கள் வெளியிட்ட நூல்களில் அவர்களை எத்தகு உயர்ந்த நட்போடு பாரத தேசம் ஆதரித்தது என்பதை குறித்துள்ளார்கள். பாரத்-இஸ்ரேல் நட்பு ‘அபராஹ்ன சாயை’ நியாயத்திற்கு எடுத்துகாட்டாக நிகழ்காலத்தில் தொடர்கிறது.
தேசத்தை விரிவுபடுத்தும் ஆசையில் நட்பு பாராட்டும் வழக்கம் மொண்ட சீனாவோடு கை கோர்த்த தேசங்களின் வாழ்வு எவ்வாறு கெட்டது என்பதை ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள், திபெத், பாகிஸ்தான் போன்ற தேசங்களின் வரலாற்றைப் பார்த்தால் புரிந்து போகும். இது ‘பூர்வாஹ்ன சாயை’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.
‘இந்தியாவுடனான நட்பு நம்பிக்கைக்கும் உலகளாவிய வளர்சசிக்குமான அடையாளம்’. சௌதி அரேபியா இந்த உண்மையை உணர்ந்து தீவிரவாத பாகிஸ்தானோடு கொண்ட சிநேகத்தை விட்டு ‘Modified’ பாரதத்தோடு நட்பு கொண்டுள்ளது.
(மேலும் வரும்)