மறுபடியும்….காந்தியின் உண்ணாவிரதம் ஐந்து நாட்களுக்கு மேல் நீடிக்கத் தேவையேற்படவில்லை.
அந்த ஐந்து நாட்களுக்குள்ளாக ,காஷ்மீர் போர் நடப்புகள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, மதக் கலவரங்கள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, காந்தியின் உண்ணாவிரதம் தினசரிகளில் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.
நேருவும் அவருடைய ஏனைய சகாக்களும்,காந்தியிடம்,உண்ணா விரதப் போராட்டத்தை திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினார்கள்.
அதற்கு பதிலாக அவர் இரண்டாவது நிபந்தனையும் விதித்தார்.
இந்தியா பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும்,இல்லை தன் மரணத்தை பார்க்க வேண்டும்.
பாகிஸ்தான்,இந்தியா மீது போர் தொடுத்திருப்பது பற்றி( காஷ்மீர் ஆக்கிரமிப்பு தொடர்பாக ) கவலை இல்லை.அதை காரணமாக வைத்து பணம் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்றார் காந்தி.
முதல் கோரிக்கை : டெல்லி வாழ் ஹிந்துக்கள் முஸ்லீம்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இரண்டாவது கோரிக்கை : இந்திய அரசு மனமாற வேண்டும்.பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தே ஆக வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியெங்கும் பல்வேறு நிலையிலிருந்த குடிமக்களை சந்தித்து பேசினார்கள்.
பல்வேறு குழுக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஃபார்முலாவை உருவாக்க இரவும் பகலுமாக முயற்சித்து வந்தார்கள்.
டெல்லி அமைதியாகி விட்டது என கூறி காந்தியை ஏமாற்ற முடியாது என அவர்களுக்குத் தெரியும்.
ஏனென்றால் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அகதிகள் ஊர்வலம் ஊர்வலமாக காந்தி உண்ணாவிரதம் இருந்த பிர்லா ஹவுஸ் அருகே காந்தியின் காதுகளிலே விழ வேண்டும் என்பதற்காகவே கோஷங்களை எழுப்பினார்கள்.
தங்களுக்கு அநீதி இழைத்த முஸ்லீம்களை பழி வாங்கியே தீருவாம் என்பதே கோஷத்தின் சாரம்.
பழிக்கு பழி இரத்தத்திற்கு இரத்தம் !! என கோஷங்கள் விண்ணை அதிரச் செய்தன.
இது காந்தியின் காதுகளில் விழவும் செய்தன.
இது தவிர வெளியில் இருக்கும் உண்மை நிலவரத்தை,அவ்வப்போது அறிந்து தனக்கு தெரிவிக்க சிலரை காந்தி ஏற்பாடு செய்திருந்தார்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை தெரிவித்து காந்திக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன.
பலர் நேரிலும் வந்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரிய வண்ணமும் இருந்தனர்.
1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ந் தேதி
’’பிர்லா ஹவுஸிற்கு எல்லோரும் வருவதை தவிருங்கள்.நான் உண்ணாவிரதத்தை கைவிடுவதற்கு நிர்பந்தப்படுத்தாதீர்கள்,என்னப் பற்றி கவலைப்படாதீர்கள் ‘’ என அங்கு நடைப்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தின் போது காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
‘’ நான் இப்போது கடவுளின் கைகளில் இருக்கிறேன் ‘’ என்றார்.
ஆனால் மக்கள் கேட்பதாக இல்லை.
பிர்லா ஹவுஸ் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம்.
ஆங்காங்கே மரத்தடிகளில்,டைப்ரைட்டர்களுடன் பத்திரிகையாளர்கள்,வந்து சென்று கொண்டிருந்த முக்கியஸ்தர்களின் பெயரை பத்திரிகைகளுக்கு அனுப்ப தயார் செய்துக்கொண்டிருந்தார்கள்.
பிர்லா ஹவுஸ் டெல்லியின் மையப்புள்ளி ஆனது.
நேரு தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன்,பிர்லா ஹவுஸ் வளாகத்தில், பாகிஸ்தானுக்கு 55 கோடிகள் கொடுத்து விடுவது பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தார்.
அந்த கூட்ட முடிவில்,காந்தியின் கோரிக்கையை ஏற்பது என மத்திய அரசு முடிவு செய்தது.
காந்தி கோரியபடி,பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து விடுவது என முடிவெடுக்கப்பட்டது.
இப்போதுஅவருடைய இன்னொரு கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் பாக்கி இருந்தது.
அது,நேருவின் அமைச்சரவை சகாக்கள் கூடி எடுக்கக்கூடிய முடிவல்லவே !
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்