பெங்களுர் பசவனகுடியில் பகுதியில் வசிக்கும் சிராக் ஆர் மேத்தா (21) என்ற இளைஞர், அங்குள்ள லாட்டரி டிக்கெட் கடை உரிமையாளரின் மகன். இவர் க்ரைம் தொடர்பான தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களை விரும்பி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் கிரிக்கெட் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு செலவழிக்க விரைவாக பணம் சம்பாதிக்க அவர் திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி சேனலில் பிரபலமான குற்றம் சம்பந்தமான தொடர்களைப் பார்த்தபின் கடத்தல் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
இதற்காக கடந்த 28ஆம் தேதி வாடகை பைக்கில் சென்ற அவர், 4ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை கடத்தியுள்ளார். பின்னர் சிறுவனின் தந்தையோடு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிராக், உங்கள் மகனை கடத்திவிட்டதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு மகனை கூட்டி செல்லவும் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து பள்ளி பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து சென்ற காவல்துறை, செல்போன் எண் மூலம் கண்காணித்து அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
அதன்படி ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த இளைஞர் சிராக்கை பிடித்த காவல்துறை அவரிடம் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். விசாரணையின் போது, அண்மையில் நான் பார்த்த இந்தி திரைப்படத்தில் இருந்த காட்சிகள் போன்று திட்டமிட்டு சிறுவனை கடத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.