கட்டுரை: கமலா முரளி
“மூச்சு விடாமல் இருந்தாலும் இருப்பான் மனுஷன், பேசாம இருக்க மாட்டான் “ என்று முணுமுணுப்பது உண்டு ! இன்றோ மூச்சு விட முடியாததைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
நமக்குத் தெரிந்த செய்திகளை யாரிடமாவது சொல்வதிலும் அனைவருக்கும் ஒரு அலாதி மகிழ்ச்சி !
”ராஜா காது கழுதைக் காது” கதையில் ரகசியத்தை மரத்திடம் சொல்வதாக வருவதைப் போல், நமக்குத் தெரிந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்து விடும் சிலருக்கு!
நம் திண்ணைகளும் ஆல / அரச மரத்தடிகளும் வாட்ஸ் ஆப்புக்கும் ஃபேஸ்புக்கும் சிறிதும் குறைந்ததல்லவே !
வம்புச் செய்திகளுக்கு மட்டுமல்ல ! மனித வாழ்வை மேம்படுத்தவும் தகவல் தொடர்பு மிக அவசியம் !
அச்சுப்புத்தகங்கள், தொலைபேசி, தந்தி மூலம் செய்தி என்று படிப்படியாகத் தகவல் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.
கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்ட பின், தொலைதொடர்புத் துறை சற்று வேகமாக , மிகச் சிறந்த தொழில்நுட்பப் புரட்சியாக வளரத் துவங்கியது.
வானொலி, தொலைக்காட்சி, கை பேசி என சமூக தகவல் தொடர்பு சேவைகளும், தனிநபர் தொலை தொடர்பு வசதிகளும் பரவின.
இருபதாம் நூற்றாண்டின் ”இணைய வழி தொலைதொடர்பு : உலகளாவிய இணைய வலை “ ( World Wide Web ) கண்டுபிடிப்பு இம்மாபெரும் உலகை , ”உலகளாவிய கிராமமாக ” சுருக்கியுள்ளது எனவே கூற வேண்டும்.
இணைய வழித் தொடர்பு, முதலில் ராணுவத் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்காக வல்லரசு நாடுகளால் பயன்படுத்தப்பட்டது.
உலக மயமாக ஆகிக் கொண்டிருந்த சந்தை நுணுக்கங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் இன்றியமையாயை உணர்த்தியதால், இன்றோ இணைய வழி இன்றியமையாததாக ஆகி விட்டது.
கணினி தொழில்நுட்பம், கை பேசி மற்றும் திறன்பேசி, இணையவழி சமூகத் தொடர்புகள் ஆகியவை கைகோர்த்து நடை போடும் இந்நாளில், தொழில் வளர்ச்சி, கல்வி, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, திறன் வளர்ச்சி, அரசாங்க மேலாண்மை என அனைத்துமே ICT Information and Communication Technology எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தினைச் சார்ந்தே உள்ளது.
உலக தகவல் தொடர்பு நாள் வரலாறு
தகவல் தொடர்பு சங்கம் 1865 ஆம் ஆண்டில் ”தந்தித் தொடர்பு மாநாட்டை நடத்தியது. அப்போது அந்த சங்கம் “தந்திதொடர்பு சங்கம்” என அறியப்பட்டது.
உலக நாடுகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு பற்றிய புரிதல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் முதன்முதலில் கையெழுத்தான நாள் மே 17 ம் நாள் ஆகும்.
உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூகம் ( World Telecommunication and Information Society ) மே 17ம் நாளை 1969 ஆம் ஆண்டில் இருந்து உலக தொலைத் தொடர்பு நாளாக அனுசரித்து வருகிறது.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தொலைத்தொடர்பு உச்சி மாநாட்டில் மே 17ம் நாளை உலக தொலைத்தொடர்பு தினமாக அனுசரிக்க ஐக்கியநாடுகள் சபையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் உலக தகவல் தொடர்பு நாள் கொண்டாடப்படுகிறது.
சூறாவளிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தகவல்கள் , போர்மூட்டம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு , மனிதகுல மேம்பாட்டுக்கு உதவும் அறிவியல் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஐ.டி.யூ முன்னெடுத்து செய்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருள் முன்னிறுத்தப்படும்.
கடந்த ஆண்டு “உறுதியான தொடர் முன்னேற்றத்துக்கான தகவல் தொடர்பு” என்ற கருத்தும் 2030 ஆண்டுக்குள் மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் அனைவருக்குமான ஏற்றத்தாழ்வில்லா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்தல் என்ற குறிக்கோளும் கருப்பொருளாக மேற்கொள்ளப்பட்டது.
உலக தகவல்தொடர்பு சமூகம் ( ITU ) வெளியிட்டிருக்கும் செய்தி: கொரோனா தொற்றுப் பாதிப்பு, தகவல் தொழில்நுட்பத்தின் தேவையை, உலக சமுதாயத்தின் தொடர்பணிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மிக இன்றியமையாத ஒரு கூறு என்பதை உணர்த்தியிருக்கிறது. மேலும், நாடுகளுக்கு இடையேயும், ஒரு நாட்டுக்குள்ளேயே நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு இடையேயும் தகவல் தொழிநுட்ப வளர்ச்சி, நுகர்வு ,பயன்பாடு சமமாகக் காணப்படவில்லை.
இந்த ஆண்டின் கருப்பொருளாக “ தகவல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியை முடுக்கிவிடுதல்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுல வளர்ச்சிக்கு தகவல்தொடர்பு வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கிறது என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
உலக முன்னேற்றத்துக்காக நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது ஒருபுறமிருக்க, கயமைத்தனத்துடன் வெறுப்புணர்வை வளர்க்கும் தகவல்களை விடுத்து “ஸர்வே ஜனா: சுகினோ பவந்து, லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” எனும் நம் பாரம்பரிய உந்துதலுடன் நட்புணர்வையும் நல்லுணர்வையும் ஏற்படுத்தும் தகவல்களைப் பறிமாறும் சிறு உறுதிமொழியையாவது நாம் எடுத்துக் கொள்வோமே !