முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறித்த பரபரப்பு திருப்பமாக, தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தார் ப.சிதம்பரம். நான் இங்கேதான் இருக்கிறேன் ; எங்கும் ஓடிவிடவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இன்று இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 15 மாதத்துக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன்! ஐ.என்.எஸ் மீடியா வழக்கைப் பொருத்தவரை நானோ என் குடும்பத்தினரோ குற்றவாளி அல்ல!
சிபிஐ போட்ட எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை; கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன்.! நேற்றும் இன்றும் நீதிமன்றத்தை அணுகினோம்.
நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த வழக்கு இன்றும் வரவில்லை. நாளையும் வராது. வெள்ளிக்கிழமை தான் வரும். நான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தலைவணங்குகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் எத்தனையோ குழப்பங்கள் நடந்துள்ளது என்று கூறிவிட்டுச் சென்றார் ப.சிதம்பரம்.!
முன்னதாக, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளது.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே, அடுத்த 2 மணி நேரத்திற்குள் சிதம்பரம் சிபிஐ துணை கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் வந்தபோதிலிருந்தே சிதம்பரம் தனது வீட்டில் இல்லை. தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் வீடு மற்றும் அவர் செல்லும் இடங்களில் சென்று அவரைத் தேடி வருகின்றனர்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவல் ப.சிதம்பரத்திற்கு மொபைல் போனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த சிதம்பரம் இதைக் கேட்டதும் தனது டிரைவர் மற்றும் உதவியாளரை வழியிலே இறக்கிவிட்டு காரை ஒட்டிச் சென்றுள்ளார். கார் ஓட்டுநரிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்ததில் இது தெரிய வந்துள்ளது. மேலும், தீர்ப்பு வந்த உடனேயே சிதம்பரம் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அவர் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் தனது வழக்கறிஞர்களுடன் சென்று திரும்பியுள்ளார். அதே நேரத்தில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், ‘சிதம்பரம் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றம் கூறியுள்ள படி அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சிதம்பரம் தரப்பில் 3 நாட்கள் அவகாசம் கோரப் பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவரது மனு விசாரிக்கப் படும். இதனிடையே ப.சிதம்பரம் இன்று இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, உடனே வெளியேறினார்.