உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் ‘நம்பர்-5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார்.
இதில், முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21-7 என கைப்பற்றி வெற்றியை தன் வசப்படுத்தினார்.
இந்தப் போட்டி 36 நிமிடம் நீடித்தது. இதன் மூலம் 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
மேலும், உலக பாட்மிண்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கெனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்த பி.வி.சிந்து இந்த முறை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதை அடுத்து, இந்தியாவின் புகழை உயர்த்தியிருக்கும் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் சிந்துவுக்கு வாழ்த்துகள். சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
- பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப் படுத்தியுள்ளார், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் – பிரதமர் மோடி..