முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் தலாக் கூறிய தங்கள் கணவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம்களில் மூன்று முறை தலாக் கூறி தங்கள் மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. உலக அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும் காலாவதி ஆகிவிட்ட இந்த நடைமுறை இந்தியாவில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தது. பெண்களுக்கு பெரிதும் பிரச்சினையை ஏற்படுத்திய இந்த நடைமுறையால் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து முத்தலாக் தடை மசோதா எனப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி முஸ்லிம் கணவர்கள் தங்கள் மனைவியரிடம் வாய்மொழியாகவோ கூறும் செய்தி எஸ்எம்எஸ் வாயிலாகவோ அல்லது பிற வழிகளிலும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்!
இதனிடையே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது எடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவர்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் வெளிப்படையாக புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் மட்டும் இதுவரை 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதிகபட்சமாக மீரட் மாவட்டத்தில் 26 வழக்குகளும் சகாரன்பூர் 17 வழக்குகளும் ஷாமிலியின் பத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த மூன்று மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வரதட்சனை சொத்து தகராறு குடும்ப வன்முறை போன்ற விஷயங்களை பெரும்பாலான வழக்கு காரணமாக உள்ளன.
இதுவரை 200க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் இரண்டு அல்லது மூன்று பேர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் பெண்கள் பலர் கொடுத்த புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்!