200க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை முடக்கியது டிவிட்டர்: பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக இந்திய ராணுவம் அளித்த புகாரையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் கணக்குகளை முடக்கி டிவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிவிட்டரில் ராணுவத்திற்கு எதிரான பொய்யான தகவல்களை பாகிஸ்தானில் இருந்து பரப்பிவந்தனர். ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரின் பெயர்களில் பொய்யான கணக்குகள் துவக்கப்பட்டு தவறான செய்திகள் பரப்பப்படுவதாக இந்திய ராணுவத்தின் சார்பில் டிவிட்டர் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலி கணக்குகளை கண்டறிந்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை டிவிட்டர் நிர்வாகம் மேற்கொண்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரதத்தில் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப் பட்ட பின்னர் ஹிந்துஸ்தான் குறித்து தவறான தகவல்களை பரப்புவதற்காக பாகிஸ்தான் ஏஜென்சிகள் பல டிவிட்டர் பக்கங்களை போலியாக உருவாக்கியுள்ளன. குறிப்பாக, இந்திய ராணுவத் தலைமை தளபதி, ராணுவ உயர் அதிகாரிகள் பெயர்களில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கி, பல்வேறு அவதூறுக் கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றன. இது குறித்து இந்திய ராணுவமும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் கடுமையான நடவடிக்கையும் எடுத்து வருகின்றன.
“ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் பெயர்களில் போலியாகத் தொடங்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளும் அவற்றின் செயற்பாட்டாளர்களும் உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நாங்கள் புகார் அளித்துள்ளோம், அந்தக் கணக்குகளில் ஏராளமானவை இப்போது நீக்கப்பட்டுள்ளன” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்ற உடனேயே இத்தகைய போலி டிவிட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன! மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை குறித்து பாகிஸ்தானின் பொய்களுக்கு ஏற்றவாறு இட்டுக் கட்டப் பட்ட தகவல்களையும் அவை ட்வீட் செய்து வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
வட இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், முன்னாள் துணைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் தேவ்ராஜ் அன்பு மற்றும் முன்னாள் மத்திய ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ். நேகி ஆகியோர் அடங்கிய இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயர்களிலான போலி கணக்குகள் தற்போது நீக்கப் பட்டுள்ளன.
“சில கணக்குகள் மிகவும் தவறான தகவல்களை பரப்புகின்றன. இவை குறித்து தெரியவந்ததும், ட்விட்டர் அவற்றை 15-20 நிமிட அறிவிப்பில் நிறுத்தி வைத்தது. மேலும் இதுபோன்ற 50 க்கும் மேற்பட்ட கணக்குகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்னல் விஜய் ஆச்சார்யாவின் பெயரிலான ஒரு போலி கணக்கு உருவாக்கப்பட்டது. அதில், தனது 65 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாகிஸ்தானால் கொல்லப்பட்டதால் அவர் இந்திய இராணுவத்தை விட்டு வெளியேறுவதாக ட்வீட் செய்துள்ளதாக டிவிட் செய்யப் பட்டுள்ளது. இந்த டிவிட், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டது. காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பிரசாரத்தில் இதுவும் ஒரு கட்டுக் கதையாக அமைந்தது.
குறிப்பாக, டிவிட்டரில் இது போன்று புனைகதைகளை உருவாக்கி, இந்திய ராணுவ அதிகாரிகள் பெயர்களில் அதனைப் பதிவிட்டு, உடனே அதையே மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்திகளாக்குவது இப்போது பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது.