மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டுவரும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் தில்லி மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டுவரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பு 36 கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி மோசடி செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து சிபிஐயிடம் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பு மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் வெளிநாடுகளிலிருந்து அம்னஸ்டி அமைப்பு நிதி பெற்றதில் அன்னியச் செலாவணி விதிகள் மீறப்பட்டதாக தெரியவந்தது!
இந்த நிலையில் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் தில்லி மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனைகளை சிபிஐ நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆனால் இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் அதிகாரி கூறியபோது, மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் செயல்படுகிறது; மனித உரிமை அமைப்புகள் நிறுவனங்களை ஏதோ பொருளாதாரக் குற்றங்களைச் செய்த நிறுவனங்கள் போன்று இந்திய அரசு நடத்துகிறது. பிற நாடுகளில் உள்ளதைப்போன்றே இந்தியாவிலும் எங்கள் பணிகள் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உள்ளன! என்று கூறினார்.