28 வருடம் கழித்து மீண்டும் அரிதாரம் பூசுகிறார் நடிகை அமலா.
டி ராஜேந்தர் இயக்கத்தில் 1986இல் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலா. பரதநாட்டியம் மீதான காதலால், நாட்டியம் கற்க வந்து, அது போன்ற கதாபாத்திரத்தால் நடிக்க ஆசை கொண்டு, நடித்தவர் அமலா.
அதைத் தொடர்ந்து, ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தை பிடித்தவர். பின்னாளில் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்தார். முன்னணி நடிகர்களுடன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் 1991இல் பாசில் இயக்கத்தில் கற்பூர முல்லை என்ற படத்தில் தனிப்பட்ட கதாநாயகி வேடத்தில் நடித்ததுடன் திரை உலகத்தை விட்டு விலகினார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா, ஹைதராபாத்தில் குடியேறினார். தற்போது 28 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அமலா கூறுகையில் நான் அற்புதமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து மீண்டும் திரையுலகத்துக்கு திரும்பியிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்!