அயோத்தியில் பசுக்களுக்கு ஸ்வெட்டர்கள் அணிவிக்கிறார்கள். பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் காளைகளுக்கும் இனி குளிரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கப் போகிறது.
அயோத்தி நகராட்சியில் நிர்வகிக்கப் படும் கோசாலைகளில் உள்ள பசுக்கள், கன்றுகள், காளைகளுக்கு குளிர்காலத்தில் வெப்பமான கோட்டு அணிவிக்கப் போவதாக நகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா தெரிவித்தார்.
அயோத்தி புண்ணிய பூமியில் உள்ள பசுக்கள் காப்பகங்களில் தங்கியுள்ள பசுக்களின் பாதுகாப்பே தம் கடமை என்று தெரிவித்தார். 1200 பசுக்கள் 700 காளைகள் மற்றும் கன்றுகள் உள்ள ‘பைசிங்பூர்’ கோ சம்ரக்ஷணை கேந்திரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறினார்.
முதலில் 100 பசுக்களுக்கு ஸ்வெட்டருக்கான ஆர்டர் அளித்துள்ளதாகக் கூறினார். நவம்பர் இறுதிக்குள் அவை கிடைத்துவிடும் என்றும் இரண்டு மூன்று நிலைகளாக முழு அளவில் ஸ்வெட்டர்கள் அணிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சணலால் தயாரிக்கப்படும் இவற்றின் விலை ஒவ்வொன்றும் ரூ 250 முதல் 300 வரை இருக்கும் என்று சுக்லா குறிப்பிட்டார். கன்றுகளுக்கு மூன்று அடுக்கு, பசுக்களுக்கு இரண்டு அடுக்கு, காளைகளுக்கு ஒரு வரிசை என்று சணலில் பின்னப்பட்டு ஸ்வெட்டர்கள் தயாரிக்கப்படுவதாகக் கூறினார் .
அதோடு குளிர் அதிகமாக இருக்கும் போது குளிர் காய்வதற்கு நெருப்பு மூட்டப்படும் என்றும் அறிவித்தார். அயோத்தி கார்ப்பரேஷனில் உள்ள பசு பாதுகாப்பு நிலையத்தில் சிறப்பான சேவைகள் அளிப்பதே தம் நோக்கம் என்று நகர மேயர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.
இன்னும் அதிக அளவில் பசு பாதுகாப்பு நிலையங்களை அமைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.