- ஹைதராபாதில் ஆர்டிசி பஸ் அடித்துச் சென்ற இளம்பெண்.
- விபத்தில் டிசிஎஸ் பெண் பொறியாளர் மரணம்.
- தற்காலிக டிரைவரை அடித்து உதைத்த பொதுமக்கள்.
டிசிஎஸ்ஸில் வேலை செய்யும் ஓர் இளம்பெண்ணை அரசுப் பேருந்து பலி கொண்டது. பஸ் சக்கரங்களில் நசுங்கி அந்தப் பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்கு தற்காலிக டிரைவரின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.
பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 12 ல் ஆர்டிசி பஸ் டிரைவரால் இந்த விபத்து ஏற்பட்டது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின்னாலிருந்து பஸ் மோதியது. பெண்ணின் தலைமீது பஸ் சக்கரம் ஏறியதால் அந்தப் பெண் அங்கேயே கொடூரமாக உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடைய தலை சிதைந்து போனது.
விபத்தில் உயிரிழந்த பெண் டிசிஎஸ் ஊழியர் சோஹினி சக்சேனா (26). சோஹினி செவ்வாயன்று (நவ.26) மதியம் தன் இரு சக்கர வாகனத்தில் மாசப் டாங்கிலிருந்து பஞ்சாரா ஹில்சை நோக்கி வரும் போது இந்த விபத்து நேர்ந்தது.
விபத்துக்கு காரணமான தற்காலிக டிரைவரை அங்கிருந்தவர்களும் பயணிகளும் பிடித்து தாக்கினர். உடைகளை அவிழ்த்து அடித்து நொறுக்கினர். ஆத்திரத்தோடு பஸ்ஸையும் தாக்கினர். பெண்ணின் உடலருகில் போராட்டம் நடத்தினர்.
அதனால் மாசப் டாங்க், பஞ்சகுட்டா, மெஹிதிபட்னம் மார்க்கத்தில் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் இறந்த உடல் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டதை பார்த்து பலரும் பொறுப்பற்ற அவர்களின் செயலுக்காக வருந்தினர்.
சோஹினி சக்சேனாவின் கணவர் வினித் குமாரும் இரண்டு சிறு குழந்தைகளும் சோஹினியின் இழப்புக்காகக் கதறித் துடிக்கின்றனர். சோஹினி சக்சேனா, வினித்குமார் தம்பதிக்கு மூன்று வயதில் இரட்டைக் குழந்தைகள். குழந்தைகள் இரண்டும் கதவருகில் நின்று கொண்டு தாய் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.