திருடப் போன இடத்தில், பொருட்களை எல்லாம் திருடிக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துச் செல்லும் வினோத திருடர்களைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், திருடன் ஒருவனுக்கு, அவன் திருடிச் சென்ற பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, முக்கியமான பென் டிரைவ் மட்டுமாவது திருப்பிக் கொடுத்து விடு என்று பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
கேரளாவில் ஒரு பள்ளியில் நடைப்பெற்ற திருட்டில், தலைமையாசிரியர் அறையில் இருந்த விலையுயர்ந்த 3 லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்க், பணம் உள்ளிட்டவைகளுடன் லேப்-டாப்பில் இருந்த பென் டிரைவ் ஒன்றையும் திருடன் எடுத்துச் சென்றுள்ளான். இதே பள்ளியில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பும் இப்படியொரு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பள்ளி சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்தனர்.
அதன் பின்னர், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமிராவையும் பொருத்தியுள்ளனர். இம்முறை திருட வந்தவன், சிசிடிவி கேமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளான்.
இனி காவல்துறையை நம்பி பயனில்லை என்று முடிவு செய்திருந்த பள்ளி ஆசிரியர்கள், திருடனுக்கு உருக்கமாக கடிதம் எழுத முடிவெடுத்தனர்.
அதன்படி, திருடப்பட்ட பொருட்களில் பென் டிரைவ்-ஐ மட்டும் திருப்பி எடுத்தப்படியே யாருக்கும் தெரியாமல் கொடுத்து விடுமாறு திருடனுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். அந்த பென் டிரைவ்வில் தான் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு அடங்கியிருப்பதாகவும், அது கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்றும் உருக்கமாக திருடனுக்கு கடிதம் எழுதி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்.
அந்தக் கடிதத்தில், 7 மாதத்துக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. அவர்களால் உங்களை கண்டுப் பிடிக்க முடியவில்லை. அதனால், தயவு செய்து பென் டிரைவ் மட்டுமாவது திருப்பித் தாருங்கள். இம்முறை நாங்கள் காவல் நிலையம் செல்லவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். திருடனுக்கு எழுதிய கடிதத்தில், காவல்துறையினருக்கும் ஷொட்டு கொடுத்த ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.