பாத்தபஸ்தி லால்தர்வாஜா ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேசிஆரிடம் எம்ஐஎம் தலைவர் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனு அளித்ததை பிஜேபி எம்எல்ஏ கண்டித்துள்ளார்.
இந்து ஆலயங்களின் வளர்ச்சி பற்றி பேசும் உரிமை எம்ஐஎம் தலைவர்களுக்கு இல்லை என்று பிஜேபி தலைவர் கோஷா மஹால் எம்எல்ஏ ராஜாசிங் கோபமடைந்துள்ளார். பாத்த பஸ்தியிலுள்ள லால் தர்வாஜா மகாகாளி கோவிலை எவ்வாறு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று விமர்சித்தார்.
முதல்வரின் திட்டப்படியே அக்பருதீன் ஒவைசி பிரகதி பவனுக்குச் சென்றார் என்று அவர் குற்றம் சாட்டினார். ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட ராஜாசிங் டிஆர்எஸ், எம்ஐஎம் கட்சிகளின் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிந்துக்களின் எதிர்ப்பாளராக தம் மீது விழுந்துள்ள கறையைத் துடைப்பதற்காக மஜ்லிஸ் கட்சித் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று ராஜாசிங் ஏளனம் செய்தார்.
இதற்கு முன் இந்துக்களையும் பசுக்களையும் முன்வைத்து செய்த விமர்சனங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்டு விட்டு அதன் பிறகு இந்து கோவில்களின் வளர்ச்சிப் பணிகள் பற்றி அக்பருதீன் பேசலாம் என்று ராஜாசிங் விமரிசனம் செய்தார் .
கேசிஆர், எம்ஐஎம் கட்சிக்கு மட்டுமின்றி மாநிலத்திற்கு கூட முதல்வராக நடந்து கொள்ள வேண்டுமென்று ராஜாசிங் கேலி செய்து விமர்சித்தார். முதல்வரை சந்திப்பதற்கு தனக்கு மட்டும் நேரம் கொடுப்பதில்லை என்றும் எம்ஐஎம் தலைவர்களுக்கு மட்டும் கேட்காமலேயே நேரம் ஒதுக்குகிறார் என்றும் குற்றம் சாட்டினார். தொகுதிப் பிரச்சனைகளை கூறுவதற்கு முயற்சித்தால் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 பிரகதி பவனில் முதல்வரை சந்தித்த எம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி பாத்த பஸ்தியில் உள்ள மகா காளி கோவில் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பித்தார்.
ரூ 10 கோடியில் ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் முதல்வர் கேசிஆரை ஹிந்து கோவில் வளர்ச்சிப்பணிக்காகவும் மசூதி வளர்ச்சிப் பணிக்காகவும் சந்தித்ததும் உடனடியாக முதல்வர் அவற்றுக்கு நிதி ஒதுக்கியதும் விவாதத்திற்குரிய அம்சமாக மாறியது.
முஸ்லிம்களுக்காக போராடும் எம்ஐஎம் இந்துக்களின் பிரச்சினைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதன் பின்னாலுள்ள காரணம் வேறு ஏதோ இருக்கிறது என்று பலரும் விமர்சன மழையைக் குவித்தனர்.