புது தில்லி:
அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான, அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு விசாரணை, லக்னௌவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட் கிழமை இன்று மீண்டும் தொடங்குகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் கடந்த 1992 டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர சேவகர்களுக்கு எதிராக லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், குற்றச் சதியில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உ.பி. முன்னாள் முதல்வரும், தற்போதைய ராஜஸ்தான் ஆளுநருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னௌ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.
அத்துடன் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி 2 ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.
முன்னதாக வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முன்னாள் எம்.பி. வேதாந்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களான கண்பத் ராய், வைகுந்த் லால் சர்மா உள்ளிட்ட 5 பேர் லக்னோ நீதிமன்றத்தில் சரணடைந்து உடனடி ஜாமீன் பெற்றனர். அதுபோல் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஜாமீன் பெற வேண்டும். கல்யாண் சிங் தற்போது ஆளுநராக இருப்பதால், அவர் அப்பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.