மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் எம்.பத்மகுமார். மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ள இவர் தான், சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தை இயக்கியவர்..
கடந்த மாதம் கொரோனா மற்ற நாடுகளில் தீவிரமடைந்த சமயத்தில் இவரது மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் இசாக் இருவரும் பிரான்ஸில் இருந்தார்கள்.
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியா திரும்பிய இவர்களுக்கு தில்லியில் கொரோனா தாக்கம் இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது.கொரோனா தொற்று இல்லை என கூறி இவர்கள் சொந்த ஊரான கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
ஆனாலும் இயக்குநர் பத்மகுமார் தனது மகனுக்கும் அவனது நண்பனுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தானே அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் கேரள முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் பத்மகுமார். சிகிச்சைக்கு செல்வதற்கும் தனிமைப்படுவதற்கும் பயந்து வெளிநாட்டு பயணத்தை மறைக்கும் நபர்கள் மத்தியில், தனது மகனை தானே மருத்துவமனையில் சேர்த்த இயக்குனர் பத்மகுமாருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.