கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது.
ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலையும் மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீத்தில் 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளது.
தூர்தர்ஷன் சேனல் மட்டுமல்லாமல் தனியார் சேனல்களுக்கும் பார்வையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர் என பி.ஏ.ஆர்.சி தெரிவித்துள்ளது. ராமாயணம் மட்டுமல்லாமல் மகாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களையும் மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர்.
இதில் தூர்தர்ஷன் சேனலுக்கு ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் தான் பெரும் பார்வையாளர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளன. ஒட்டு மொத்தமாகக் கணக்கிடும் போது, கடந்த இருவாரங்களுக்கு முன் இருந்த பார்வையாளர்களைவிட கடந்த வாரம் 4 சதவீதம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் காலத்துக்கு முன் ஒப்பிடும்போது இது 43 சதவீதம் அதிகமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.