தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 என்றும், அதில் சென்னை யில் மட்டும் 94 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் இன்றைய சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பில், இன்றைய பாதிப்பு: 104 என்றும், சென்னையில் 94 பேருக்கு புதிய பாதிப்பு என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
எனினும், நோய் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து இன்று இல்லம் திரும்பியோர் 82 பேர் என்றும், இதுவரை குணமடைந்தவர்கள் – 1,210 பேர் என்றும் கூறப் பட்டிருக்கிறது.
இன்று உயிரிழந்தவர்கள் 2 பேர் என்றும், இதுவரையிலான உயிரிழப்பு 27 என்றும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2162 என்றும், சென்னை யில் மட்டும் 767 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது!
தமிழகத்தில் பரிசோதனை மையம் 41ல் இருந்து 44 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மொத்த பாதிப்பு – 2,162
இன்று உறுதியானவர்கள் – 104
சிகிச்சை பெறுபவர்கள் – 922
மொத்த பரிசோதனைகள் – 1,09,961
இன்றைய பரிசோதனைகள் – 8,087
பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,455 பெண்கள் – 707
சென்னையில் இதுவரை பாதிப்புக்கு உள்ளானவர்களில் 90% பேருக்கு கொரோனா அறிகுறி காணப்படவில்லை. பரிசோதனையின் போது தான் அறிந்து கொள்ள முடிகிறது. இது மிக சவாலாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப் படுத்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை மந்தைவெளியில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது! இதை அடுத்து அந்தக் கடைக்கு வந்து சென்றவர்கள் விவரத்தை தற்போது சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்ந்துள்ளது; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இதனிடையே, கொரோனா தொற்றால் தனிமைப் படுத்தப்படுகிறது கிருஷ்ணகிரி நகரம்! கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவர் கிருஷ்ணகிரியில் தங்கியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. நேற்று வரை தொற்றில்லா பச்சை பகுதியாக இருந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.