வெளிநாடுகளில் உள்ள சுமார் 15,000 இந்தியர்களை தாயகம் அழைத்துவர 64 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 13 வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800 இந்தியர்களை தாயகம் அழைத்து வர மே 7 முதல் 13 வரை 64 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சௌதி அரேபியா, கத்தார், அமெரிக்கா, ஓமன், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்.
மே 7 முதல் மே 13 ஆம் தேதி வரை முதற்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களும் அழைத்து வரப்படுவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 விமானங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 10 விமானங்கள், கத்தார் -2, சௌதி அரேபியா- 5, இங்கிலாந்து- 7, சிங்கப்பூர் -5, அமெரிக்கா -7, பிலிப்பைன்ஸ் -5, பங்களாதேஷ்- 7, பஹ்ரைன் – 2, மலேசியா -7, குவைத்- 5, மற்றும் ஓமன் -2: விமானங்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை துபாய்யில் இருந்து இரண்டு விமானங்கள் சென்னைக்கும், மலேசியாவில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு தலா ஒரு விமானம் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் அந்தந்த பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிக்காகோ -தில்லி- ஹைதராபாத் பயணக் கட்டணம் ரூ. 1 லட்சம் எனவும், லண்டனில் இருந்து மும்பை, ஆமதாபாத், தில்லி வர பயணக்கட்டணம் ரூ.50,000 இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.