பாட்னா:
என் இரண்டு மகன்களுக்கும், அடக்கமான மருமகள்தான் தேவை. சினிமா தியேட்டர், மால்களுக்குச் செல்லும் பெண்கள் தேவை இல்லை என, பீஹார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் போது ராப்ரி தேவி கூறியதாவது:
சினிமா தியேட்டர்கள் மற்றும் மால்களுக்கு செல்ல விருப்பப்படும் பெண்களை என் மருமகள்களாக ஏற்க விரும்பவில்லை. அவர்கள் நல்ல பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும். என் மகள் தேஜ் பிரதாப்புக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனவே வீட்டை கவனித்து கொண்டு, மூத்தவர்களை மதித்து வெளி வேலைகளையும் திறமையாக கவனித்துக் கொள்ளும் பெண்களே என் மருமகள்களாக வர வேண்டும். குறிப்பாக அவர்கள் என்னை போல இருக்க வேண்டும் என்று கூறினார்.
பண்பாட்டையும் கலாசாரத்தையும் வலியுறுத்துவது குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாஜக.,வும்தான். ஆனால், ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவர் வீட்டிலும் இந்தப் பண்பாட்டுக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் ஆகியோர், தற்போதைய நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக உள்ளனர். இதில் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ளார். தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர்கள் மீதும், லாலு குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக.,வின் சுஷில் குமார் மால்கள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களைக் கூறியிருந்தார். அவற்றை லாலு குடும்பத்தினர் வழக்கம்போல் மறுத்து வருகின்றனர்.