மும்பையில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை ஒன்று தற்செயலாக கூர்மையான ஊக்கு (Safety pin) ஒன்றை விழுங்கியுள்ளது. இதனால் மூச்சுத்திணறால் அவதிப்பட்ட குழந்தையை மருத்துவமனை அழைத்து செல்வதற்காக பெற்றோர் வீட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வாகனத்திற்காக காத்திருந்த போது அந்த வழியாக கொலேகர் என்ற காவலர் வந்துள்ளார்.
அவர் உடனடியாக தனது சொந்த வாகனத்தில் குழந்தை மற்றும் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி செய்துள்ளார். அவர் தக்க நேரத்தில் செய்த உதவியால் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை மும்பை காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினரை அணுகுமாறு கூறியுள்ளனர். முன்னதாக, மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது செயற்கை கால்கள் உடைந்து விட்டதாகவும், மருத்துவமனை செல்ல உதவி செய்யுமாறும் ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து அந்தப் பெண்ணை அணுகிய காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.