நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்து கடவுள்கள் பற்றிய சமாஜ்வாடி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி மாநிலங்களவையில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகள் பற்றி இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், இந்து கடவுளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார். நரேஷ் அகர்வாலின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.
அவை முன்னவரான நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘‘நரேஷ் அகர்வால் தெரிவித்த கருத்தை, சபைக்கு வெளியே பேசி இருந்தால், அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்க முடியும்’’ எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், ‘‘அவர் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது ’’ என கூறி, மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக சபை, 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அவர், ‘‘எனது பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’’ என கூறினார். பின்னர் அவர் கூறிய கருத்தின் ஒரு பகுதியை அவைக்குறிப்பில் இருந்து துணைத் தலைவர் பி.ஜே. குரியன் நீக்கினார்.