கர்நாடக மாநிலம் பல்லாரி அருகே டி.பிலகள்ளு கிராமத்தில் வசித்து வந்தவர் 60 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சுகாதாரத்துறையினர், முதியவரை தொடர்பு கொண்டு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உங்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த முதியவர் நான் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சுகாதாரத்துறையினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த முதியவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரது மகன், மருமகள், மகள் ஆகியோர் முதியவரை தனியாக விட்டுவிட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
மேலும் அந்த முதியவருக்கு சரியான நேரத்தில் உணவும் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த முதியவர் பட்டினியால் மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.