நடு வானத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் அவசர வெளியேறும் கதவை பயணி ஒருவர் திறக்க முன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வழக்கம்போல ஸ்பைஸ்ஜெட் விமானம் தில்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டுள்ளது.
அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென்று ஒருவர், எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதைக் கண்டதும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், விமான குழுவும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியைப் பிடித்துள்ளனர்.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 27, 2021 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆக்ரோஷமாக விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றார்” என்று தெரிவித்துள்ளது.
பின்னர், அந்த விமானம் அவசர அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது குறித்தும் இதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.