திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதற்காக 80 அடி சுரங்கம் அமைத்து புதையல் எடுக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாயுடு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லூரில் இருந்து திருப்பதிக்கு குடிபெயர்ந்தார். திருப்பதியில் உள்ள எம்ஆர் பள்ளி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்த இவர், நெல்லூரில் தமக்கு தெரிந்த சாமியார் ஒருவருடன் சேர்ந்து புதையல் எடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
இதில் சாமியாரிடம் இருந்த செப்பு தகடு மூலம் திருப்பதி மலையில் 120 அடி சுரங்கத்தில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை அடுத்து ஆறு கூலியாட்களை திருப்பதி சேஷாசலம் மலைக்கு அழைத்துச்சென்று கடந்த ஒரு வருடங்களாக 80 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி அடுத்த மங்கலம் பகுதியில் சேஷாசல மலைக்கு செல்வதற்காக காத்திருந்த நிலையில் திருப்பதி அலிபிரி காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின் பெயரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பதி மலையில் சுரங்கம் தோண்டுவது குறித்து தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சுமார் 80 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட போலீசார் இச்சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இன்னும் 40 அடி சுரங்கம் தோண்ட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதி மலையில் சுரங்கம் தோண்டப்பட்டு புதையல் எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.