அயோத்தியில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் மசூதிக்கான நன்கொடைக்கு மத்திய அரசின் வரி விலக்கு கிடைத்துள்ளது.
இதனை இஸ்லாமிக் கல்சுரல் பவுன்டேஷன்(IICF) சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி, ராம ஜென்மபூமி வழக்கில், வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
உத்தர பிரதேச அரசால் இந்த நிலம், சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. இதன் சார்பில் IICF எனும் அறக்கட்டளை அமைத்து, மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மசூதி கட்டுமானப்பணி ராமர் கோயிலிருந்து சுமார் 25 கி.மீ.தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் நடந்து வருகிறது. இப்பணிக்காக நாடு முழுவதிலும் IICF நன்கொடை பெறத் தொடங்கியுள்ளது.
இந்த நன்கொடை அளிப்பவர்களுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறை சார்பில் வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இது குறித்து IICF தலைவர் ஜபர் பரூக்கி கூறுகையில், “வருமான வரிச் சட்டம் 80G பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் நாங்கள் விண்ணப்பித்தோம். விண்ணப்பத்தில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அப்போது வரிவிலக்கு கிடைக்கவில்லை.
பிறகு மீண்டும் இந்த ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பித்ததில் தற்போது வருமான வரி விலக்குக்கான சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதையொட்டி நன்கொடைக்கான விழிப்புணர்வு முகாம்களை விரைவில் தொடங்கவுள்ளோம்” என்று அவர் என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காகவும் நிதி திரட்டும் பொழுது இத்தகைய வரிவிலக்கை மத்திய அரசு வழங்கியது. அதைப்போல தற்போது மசூதி கட்டுமானத்திற்கு நன்கொடை வழங்கும் பொழுது வரிவிலக்கு செய்துள்ளது. மசூதிக்காக இந்த வரிவிலக்கு பெற்ற இரண்டு தினங்களில் ரூ.20 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.