தெலங்காணா மாநிலம் பாலாம்பேட் பகுதியில் உள்ள, காகதியர்கள் கட்டிய சிவன் ஆலயம் ஐ.நாவின் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடம் என அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் தங்கள் டிவிட்டர் பதிவுகளில் பகிர்ந்து கொண்டுள்ளனர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்!
தெலங்காணா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரியச் சின்னம் என அறிவித்துள்ளது.
தெலங்காணாவின் வாரங்கல் மாவட்டம், பாலாம்பேட்டில் தொன்மை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. காகதீய வம்ச மன்னர்களால், 13ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது இந்தக் கோவில். இது, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறப்பு பெற்றது. இந்தக் கோவிலைத்தான் இப்போது யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்காக தெலங்காணா மாநில அரசுக்கும், மக்களுக்கும் பாராட்டுகள்! இந்தக் கோவிலுக்கு அனைவரும் சென்று ராமப்பாவை வழிபடுவதுடன், கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் பார்த்து ரசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.