மத்திய அரசு, மக்களுக்கு தான் வழங்கும் தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வசூலிக்கும் எக்சைஸ் வரியில் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 என விலைக் குறைப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.100 தாண்டியிருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. என்னதான் பெட்ரோல் டீசல் விலையில் நியாயவாதம் பேசினாலும் அத்தியாவசிய மற்றும் அடிப்படைப் பொருள்களின் விலை ஏற்றம் பெட்ரோல் டீசல் விலை நிலவரத்தை வைத்தே உள்ளது என்பதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது.
இந் நிலையில் மத்திய அரசு வரியில் ரூபாய் ஐந்து ரூபாய் பத்து, பெட்ரோல், டீசல் மீது குறைத்துள்ளது பொது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது மத்திய மோடி அரசு வழங்கும் தீபாவளி பரிசு!
அதேநேரம் பெட்ரோல் சில்லரை விற்பனையாளர்கள் மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நாளை விடுமுறை தினம் என்பதால் இன்று அதிக அளவிலான கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், நாளை மறுநாள் இந்த அறிவிப்பு வந்திருந்தால், தாங்கள் ஓரளவு ஸ்டாக் கிளியர் செய்து இருப்போம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை ஏறும்போதும், 30 பைசா 35 பைசா என குறைந்த அளவில் ஏறூவதும், திடீரென இதுபோல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் குறைக்கப்படும் பொழுது தங்களது வர்த்தகத்தில் மிகப்பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதாவது தங்களுக்கு சாதகமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.