கோல்கத்தா: 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை ஆசிரமத்துக்குள் புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அங்கிருந்து ரூ. 10 லட்சத்தையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதுகுறித்து மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஆசிரமம் ஒன்று உள்ளது. சனிக்கிழமை இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அந்த கான்வென்டுக்குள் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், புகுந்தது. அப்போது அங்கிருந்த ஓர் ஆசிரியை அவர்களை மறித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அந்த ஆசிரியையை கட்டிப் போட்டு உள்ளே சென்றது. இந்த ஆசிரியை, கான்வென்டுக்கு அருகே உள்ள பள்ளியில் பணி செய்கிறாராம். பின்னர், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியை அந்த ஆசிரியையின் கண் முன்பே தாக்கியது. அவரது கழுத்தை நெரித்து அவரை கொடூரமான நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது. அந்த கன்னியாஸ்திரி மயங்கிய நிலையில் கிடந்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ. 10 லட்சத்தைக் கொள்ளயடித்து ஓடிவிட்டது. பின்னர் அந்த கன்னியாஸ்திரி நாடியா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். கோல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம். காலையில் கான்வென்டுக்கு வந்த மற்றவர்கள் மூலம் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது. இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் இந்தக் கொடூரத்தைக் கண்டு கொதித்தெழுந்த உள்ளூர் மக்கள், கோல்கத்தாவையும் சிலிகுரியையும் இணைக்கும் எண் 34 தேசிய நெடுஞ்சாலையிலும், சீல்டா – ரனாகட் ரயில் பாதையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்துக்கு மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஃபிர்ஹத் ஹகிம், கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னர் 2012 பிப்.யில் பார்க் தெருவில் நிகழ்ந்த ஒரு பலாத்காரச் சம்பவத்தில் ஒரு பெண் பலியானது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, தனது அரசுக்கு எதிராக வேண்டுமென்றே புழுதி வாரித் தூற்ற இந்தச் சம்பவத்தை ஜோடிப்பதாக கூறியிருந்தார்.