பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி டில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் அவருக்கான தண்டனை விபரங்கள், இன்று(25ம் தேதி) அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இன்று காலை, யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரம் குறித்த வாதம் நடந்தது.
அப்போது யாசின் மாலிக் கூறுகையில், ஆயுதங்களை கைவிட்ட பின்னர், நான் மஹாத்மா காந்தியின் பாதையை பின்பற்றி வருகிறேன். அப்போது முதல் காஷ்மீரில் வன்முறையற்ற அரசியலை பின்பற்றுகிறேன் என்றார்.
யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என என்.ஐ.ஏ., வழக்கறிஞர் வாதாடினார்.இதன் பின்னர், நீதிபதி, யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு அளிக்கப்படுவதை முன்னிட்டு, காஷ்மீரிலும், அவரது வீடு அமைந்த பகுதியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டுரோன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அங்கு குவிந்திருந்த யாசின் மாலிக் ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களை இந்தியா தொடர்ந்து ஒடுக்க நினைக்கிறது. யாசின் மாலிக்கிற்கு எதிராக புனையப்பட்ட வழக்குகள் காஷ்மீரின் விடுதலைக்கான போராட்டத்தை தடுக்காது. காஷ்மீர் தலைவர்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் சட்டவிரோத வழக்குகளை ஐநா சபை கவனத்தில் கொள்ளவேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
யாசின் மாலிக் குறித்த ஷாகித் அப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஷாகித் அப்ரிடியின் டுவிட்டிற்கு பதில் அளித்துள்ள அமித் மிஸ்ரா, அன்புக்குறிய ஷாகித் அப்ரிடி, தான் செய்த குற்றங்களை யாசின் மாலிக்கே கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். உங்கள் பிறந்த தேதியை போல அனைத்தும் தவறாக வழிநடத்தப்படுவதில்லை’ என்றார்.