முனைவர் கு.வை.பாலசுப்பிரமணீயன்
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கு இடையே ஐந்து டெஸ்டுகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இங்கிலாந்து 246 & 420; இந்தியா 436 & 202). இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இந்தியா 396 & 255; இங்கிலாந்து 253 & 292). மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இந்தியா 445 & 430/4 டிக்ளேர்ட்; இங்கிலாந்து 319 & 122). ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இங்கிலாந்து 353 & 145; இந்தியா 307 & 192/5)
ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த இந்திய அணி இன்றைய ஐந்தாவது டெஸ்ட் வெற்றியின் மூலம் தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் சுற்ற்பயணம் மேற்கொண்டபோது, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதைதொடர்ந்து நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்தியா:
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜாக் கிராவ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் (110) மற்றும் ரோகித் சர்மா (103) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். அதோடு, ஜெய்ஷவால் (57), தேவதத் படிக்கல் (இது அவருக்கு முதல் டெஸ்ட்) (65) மற்றும் சர்ஃப்ராஸ் கான் (56) ஆகியோர் அரைசதம் விளாசினர். குல்தீப் யாதவ் (69 பந்துகள், 30 ரன்) ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆடினார். அவரைப் போலவே பும்ராவும் (64 பந்துகள், 20 ரன்) ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆடினார். இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட இங்கிலாந்து
259 ரன்கள் பின் தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 84 ரன்களை சேர்த்தார். பேர்ஸ்டோ 39 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அதோடு, டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலும், 100வது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தமிழக வீரர் அஷ்வின் படைத்துள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு 57.5 ஓவரில் ஆட்டமிழந்தது. அன்றைய தினம் 30 ஓவர்கள் ஆடிய இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 135 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் முழுவதும் இந்திய அணி ஆடி, ஆட்டநேர முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 473 ரன் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் காலை இந்திய அணி 4.1 ஓவரில் 4 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இன்றைய மீதமுள்ள ஆட்ட நேரத்தில் இங்கிலாந்து அணி 195 ரன் எடுத்து, தேநீர் இடைவேளைக்கு முன்னரே ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. ஐந்து நாள் போட்டிகள் இவ்வாறு மூன்று நாள்களிலேயே முடிவதால்தான் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் குறைகிறது.