- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதினாறாம் நாள்
ஐபிஎல் 2024 – 06.04.2024 – ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணியை (183/3, விராட் கோலி 113*, ட்யு பிளேசிஸ் 44, சாஹால் 2/34) ராஜஸ்தான் அணி (19.1 ஓவரில் 189/4, ஜாஸ் பட்லர் 100*, சஞ்சுசாம்சன் 69) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ட்யு பிளேசிஸ் இருவரும் நன்றாக ஆடினார்கள். கோலி 72 பந்துகளில் 113 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 ஃபோர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ட்யு பிளேசிஸ் 44 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் மற்றும் சௌரவ் சௌஹான் இருவரும் சோபிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுத்திருந்தது.
184 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடிய இவர் டி20 ஆட்டத்தில் சொதப்புவது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் (58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) சஞ்சு சாம்சனுடன் (42 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து 14.4 ஓவர் வரை ஆடி 148 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ரியன் பராக் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தபோதிலும் ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்து வெற்றியைப் பெற்றது.
இரண்டு அணியிலும் தலா ஒரு பேட்டர் சதம் அடித்தது இந்த ஆட்டத்தின் சிறப்பு. விராட் கோலி சற்று அதிரடியாக ஆடியிருந்தால் ஒருவேளை முடிவு மஆறியிருக்கலாம். ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையே நடைபேறும்.