புது தில்லி: ஆராயாமல் முடிவு செய்ய மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு!
அரசியல் சாசன விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த பின்னரே தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை தள்ளுபடி செய்தேன். ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று காட்டத்துடன் கூறியுள்ளார் வெங்கய்ய நாயுடு.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க மாநிலங்களவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றக் கோரி, காங்கிரஸ் தலையிட்டு எதிர்க்கட்சிகள் சிலவற்றின் துணையுடன், அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் நோட்டீஸ் கொடுத்தன. அந்த நோட்டீஸை நிராகரிப்பதாக, வெங்கய்ய நாயுடு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால், அவரது செயலை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தை மோசமான முறையில் கொண்டு சென்று, குட்டுப் பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு, தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் குறித்து சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்தேன். அதன் பின்னரே, எதிர்க் கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல் அவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, மாநிலங்களவை தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று கூறினார் வெங்கய்ய நாயுடு.