கர்நாடகாவில் லிங்காயத் பிரிவினரை தனி மதமாகப் பிரிப்பது, அங்கீகரிப்பது, அரசு சலுகைகள் வழங்க சிறுபான்மை சமூகத்தினர் அந்தஸ்து வழங்குவது என்று, தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கட்ட பிரிவினைவாத அரசியலில் இறங்கியபோதும், இந்த வேலைகள் எல்லாம் காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை.
லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள மத்திய கர்நாடகம், வட கர்நாடகத்தில் பாஜக.,வே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. லிங்காயத் தனி மதப் பிரிப்பு, காங்கிரஸுக்கு சாதகமாக அமையவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
காங்கிரஸ் இதனால் தங்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்று எண்ணியது. ஆனால், பாஜக.,வோ இத்தகைய பிரிவினை அரசியலால் சமூகத்தில் பெரும் பிளவு ஏற்படும். மற்ற சமூகத்தினரை இது ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும். இதனால் சமூகப் பிளவு ஏற்படும் என்று கூறியிருந்தது.
பாஜக.,வின் இந்தப் பிரசாரம் எடுப்பட்டிருக்கிறது என்பதைத்தான் லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மை இடங்களில் பாஜக., பெற்ற வாக்குகள் காட்டுகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகள் லிங்காயத் பிரிவினரின் வாக்குகள் பெரும்பான்மை கொண்டது. 17% மக்கள்தொகை கொண்ட லிங்காயத் பிரிவினர் ஒட்டுமொத்தமாக தங்கள் வாக்குகளை காங்கிரஸுக்கு போட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்திருக்கும்.
ஆனால், லிங்காயத் பிரிவைச் சேர்ந்த தலைவரான எடியூரப்பா அந்த தேர்தல் உத்தியை உடைத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் போட்ட திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.