பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டப் பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். இந்நிலையில், மஜத., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது. அதுபோல், குமாரசாமியின் உறவினர்களும் காங்கிரஸை நம்ப வேண்டாம் என்று குமாரசாமிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களில் சிலர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலின் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டதாக டிவி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
மேலும், குமாரசாமியின் நடவடிக்கை பிடிக்காமல், பின்னாளில் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று திரண்டு குமாரசாமியை வெளியேற்ற திட்டமிட்டு தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், குமாரசாமியின் உறவினர்கள், அவரை பாஜக.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸை நம்பாதே என்றும் அறிவுரை கூறி வருகின்றனராம்.
கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பாஜக.,வின் எடியூரப்பாவுக்கு 104 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ஆட்சியை தக்கவைக்க அவருக்கு இன்னும் 8 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவைப் படுகிறது.