மக்களவையில் அதிமுக எம்பி அன்வர்ராஜா பாரதிய ஜனதாவை கடுமையாகத் தாக்கிப் பேசியது அதிமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப் படுகிறது.
அன்வர் ராஜாவின் நாடாளுமன்ற பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் திருவள்ளூர் எம்பி வேணுகோபாலை அழைத்து, அன்வர்ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து, தனது கருத்தை அவர் தெரிவித்தார் என்று செய்தியாளர்களிடம் தகவல் சொல்லும் படி, ஆலோசனை கூறினார் எடப்பாடி என்கிறார்கள்.
அதிமுகவின் ஒரே இஸ்லாமிய எம்பி என்ற முறையில்தான் அன்வர் ராஜா முத்தலாக் விவகாரம் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கப் பட்டார்.
இருப்பினும், அவர் என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கூறப்பட்டதாகவும் ஆனால் அவர் சொந்தமாகப் பேசியதாகவும் கூறுகிறார்கள்.
முத்தலாக் மசோதாவில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே தான் பேசியதாக அன்வர் ராஜா சொல்லி வந்தாலும், அதன் பின்னணியில் மால மாற்றமும் அரசியல் மாற்றமும் இருக்கிறது என்கிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலானோரும் முத்தலாக் விவகாரத்தில் பாஜக.,வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள் என்றும் பேசப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றம் அதிமுகவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு – எதிர்ப்பு என்ற நிலையை உருவாக்கி உள்ளதாகக் கூறப் படுகிறது.
பாஜக., அதிமுக கூட்டணி உருவாகக் கூடாது என்று தினகரன் தரப்பு பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறது. எனவே, பாஜக., எதிர்ப்பு கோஷத்தை அதிமுக.,வில் பெருகச் செய்து, அதன் மூலம், அதிமுக.,வை பிளவுபடுத்தும் எண்ணத்தில் சிலர் இயங்கி வருகிறார்கள். அன்வர் ராஜாவின் பேச்சு, அதனை பிரதிபலிப்பதாகக் கூறுகிறார்கள் அதிமுக.,வினர்.
மேலும், மூன்றாம் அணி கனவில் பேசப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள், வேறு திசையில் செல்வதால், தேர்தல் நெருங்கும் நேரம் வரை பாஜக., கூட்டணி அறிவிப்பைத் தள்ளிப்போடலாம் என எடப்பாடி ஓபிஎஸ் இருவரும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. மூன்றாம் அணியிலும் பேச்சு, பாஜக., கூட்டணி குறித்தும் இருப்பில் வைத்திருப்பது என்ற நோக்கத்தில் அதிமுக., தலைமை ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்வர் ராஜா குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப் பட்டு வருகிறது. உங்களுக்கு அன்வர் ராஜா குறித்து என்ன தெரியும்? அவர் இப்போது வரை மூன்று கல்யாணம் பண்ணிவிட்டார்! கடைசி கல்யாணம் போன வருடம் நடந்தது. அவர் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் இந்தத் தகவல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஒருவர்.
இரு வருடங்களுக்கு முன் தனது மூன்றாவது திருமணத்தின் போது, அன்வர் ராஜா தெரிவித்தவை… இஸ்லாமிய சட்டத்தில் நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனது மனைவி 10 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு நான் பணிவிடை செய்தேன். அப்போது, அவரே என்னிடம் வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். எனது பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருப்பதால், எனக்கு ஆதரவாக திருமணம் செய்து வைக்க எனது மகன்கள் மற்றும் மகள்கள் விரும்பினர். அதன்படி முறையாக ஜமாத்தில் பதிவு செய்து இந்த திருமணத்தை செய்துள்ளேன். எனது மனைவி சமீரா சுல்தான் எம்.எஸ்.சி., எம்.ஏ., பி.எட்., படித்தவர். ஐந்து மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அவருக்கு தற்போது 50 வயதாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.