அலிகார்: உத்தரப் பிரதேச இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கோட்சேவுக்கு ஜே போட்டு மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகியது. இது காந்தி நினைவு நாளான நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரவலாக கண்டனங்களையும் பெற்றது.
மகாத்மா காந்திஜி 1948 ஜன.30ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 71வது நினைவு தினம் நாடு முழுதும் கடைபிடிக்கப் பட்ட நிலையில், அலிகார் இந்து மகா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அதை போட்டோ, வீடியோ எடுத்து பரவ விட்டுள்ளார்.
அப்போது, அந்த உருவ பொம்மையில் சிவப்பு நிற மை ஊற்றி, சுட்டதும் அந்த சிவப்பு நிற மை கீழே சிதறுவது போன்று செய்துள்ளார்கள். அப்போது கோட்சேவுக்கு ஜே என்ற கோஷம் எழுப்பப் பட்டது. தொடர்ந்து கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப் பட்டது.
இந்த வீடியோ சமூகத் தளத்தில் பெரும் எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும், இத்தகைய செயல்களை இப்போதும் செய்து காட்ட வேண்டுமா என்று பெரும்பாலானோரும் இந்து மகா சபாவின் செயலை விமர்சித்து வருகின்றனர்.