காஷ்மீர் தாக்குதல் குறித்து பி5 நாடுகளுக்கு விளக்கம் அளித்து அதில் பாகிஸ்தானின் கைகள் எப்படி உள்ளன என்பது குறித்து கூறியுள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விளக்கம் கொடுத்து பாகிஸ்தானை தனிமைப் படுத்தும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை இறங்கியுள்ளது.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு
புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும், இந்திய வெளியுறவுத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் சில முடிவுகள் எடுக்கப் பட்டன. இதை அடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் தூதரங்கள் வாயிலாக அந்த அந்த நாடுகளிடம் இந்தியாவின் செய்தியை கொண்டு சேர்க்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஐ.நா., சபையில் ஒரு குழு பணிகளைக் கவனிக்க, பி5 நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனாவுக்கும், தொடர்ந்து, ஜப்பான், வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கும் பாகிஸ்தானின் கரங்கள் இந்தத் தாக்குதலில் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கிச் சொல்லி வருகின்றனர். இதன் மூலம், பாகிஸ்தானை தனிமைப்படும் முயற்சியில் வெளியுறவுத் துறை இறங்கியுள்ளது.