காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீநகருக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்து நிதி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக காஷ்மீர் மாநில நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு:
பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி மற்றும் ஷாபிர் ஷா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, வாகனங்கள், ஆகியவை மாலை முதல் திரும்ப பெற்று கொள்ளப்படும்.
அவர்களுக்கோ, வேறு எந்த பிரிவினைவாத தலைவர்களுக்கோ எந்த சூழ்நிலையிலும்
பாதுகாப்பு வழங்கப்படாது. அரசின், வேறு எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும். போலீஸ் பாதுகாப்பு உள்ள மற்ற பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுள்ள பிரிவினைவாதி சையத்அலி ஷா கிலானி, யாசீன் மாலிக் ஆகியோருக்கு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதனிடையே ஹூரியத் மாநாடு அமைப்பு, நாங்கள் ஒன்றும் பாதுகாப்பைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளது.