பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானது என்று அவர் தனது கடிதத்தில் மோடிக்கு எழுதியுள்ளார்.
ஏப்.23ஆம் தேதி பாகிஸ்தான் தனது தேசிய தினத்தைக் கொண்டாடியது. அப்போது, பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த இம்ரான், பாரதப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. மோடி வெறுமனே வாழ்த்துக் கடிதம் மட்டுமே அனுப்பியிருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தனது சீன பயணத்தை முடித்துக் கொண்டு இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை அவசியம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை. காரணம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதனுடன் பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என்று இந்தியா கூறி வருகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார் இம்ரான் கான்.