1971 இந்தியா பாகிஸ்தான் யுத்தம், அதுவரை இருந்த கிழக்கு பாகிஸ்தானை சாவுமணி அடித்து வங்க தேசம் உருவாகக் காரணமானது.
யாஹ்யா கானின் மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அரக்கத்தனம், பூட்டோவின் இது “1000 years war”- என்ற கொக்கரிப்பு எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வந்து வங்க தேசம் உருவாக உதவியது இந்தியா!
கற்பழிக்கப்பட்டுத் துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிழக்கு பாகிஸ்தான் பெண்கள்…
கற்பழிப்புக்கும் கொலைக்கும் அஞ்சித் தலை தெறிக்க ஓடி வந்து அகதியாகப் புகுந்த கிழக்கு பாகிஸ்தான் பெண்கள்…
கண் எதிரே மனைவியோ மகளோ கற்பழிக்கப்பட்டதைக் கண்டு பதைத்து ஓடி வந்த கிழக்கு பாகிஸ்தானிய ஆண்கள்…
Shoot the boys – Keep the girls என்று உத்தரவிட்ட பாகிஸ்தான் தளபதி நியாஸியின் ஆணைக்குத் தன் கணவனை, மகனை இழந்து, பாகிஸ்தான் படையால் கந்தல் துணியாக ஆக்கப்பட்டு, அகதியாக இங்கே ஓடி வந்த பெண்கள்…
அத்தனை பேரும் சுதந்திர வங்க தேசம் உருவான அந்த மகத்தான தருணத்தில்…
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை, காளி மாதாவாகக் கும்பிட்டனர்!
வாஜ்பாய் கூட நாடாளுமன்றத்திலேயே இந்திரா காந்தியை “துர்கா” என்று பாராட்டினார்!
அப்போதெல்லாம் யாரும் இது ராணுவத்தின் வெற்றிதானே? ஜெனரல் மானெக்ஷாவின் வெற்றிதானே? ஏர் மார்ஷல் லால் அவர்களின் வெற்றிதானே? கப்பற்படை தளபதி அட்மிரல் நந்தாவின் வெற்றிதானே? முப்படைகளின் இந்த மகத்தான சாகசத்தில் இந்திரா காந்திக்கு என்ன பங்கு?- என்று எவரும் கேட்கவில்லையே?
இந்திரா காந்தியின் ராஜதந்திரம் – நம்மிடம் வாலாட்டிய பாகிஸ்தானை அவர்கள் நாட்டையே சிதறடித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசமாக மாற்றிய மாபெரும் சாதனை புகழப்பட்டதே?
அது இயற்கைதான்! ஆட்சி செய்பவர்களே Strategic Decisions எடுக்கிறார்கள்! அரசுத் துறைகள் – ராணுவம் உட்பட அதை அமல்படுத்தும்! அதன் சாதக பாதகங்கள் ஆட்சியாளர்களையே சாரும்!
இந்த அடிப்படை ஞானம் அற்றுப் போன காங்கிரஸ் மிகச் சரியாக மோடி – அமித்ஷா விரித்த வலையில் விழுந்தது!
என்ன செய்திருக்க வேண்டும்?
“எங்கள் இந்திரா காந்தி இதை விடப் பெரிய அளவில், வாலாட்டிய பாகிஸ்தான் நாட்டையே துண்டம் போட்டு விட்டார்; வேண்டுமானால் மோடி பலூசிஸ்தானைத் துண்டாடி பாகிஸ்தானை சிதறடித்துக் காட்டட்டும்”- என்று சவால் விட்டிருக்க வேண்டும்!
மாறாக “சூரியக் கதிர் தாக்குதல் என்று ஒன்று நடந்ததா?”- “அபிநந்தனை விடுவிக்க நட்புக்கரம் நீட்டிய இம்ரான்கான்”— என்றெல்லாம் தடுமாறி, கடைசியில் “ராணுவம் என்ன மோடியின் அப்பன் வீட்டு சொத்தா? ராணுவம் நடத்திய பயங்கரவாத முறியடிப்புத் தாக்குதலுக்கு மோடிக்கு என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது?”- என்று முரண்பாட்டுச் சகதியில் சிக்கியது காங்கிரஸ்!
இதை… இதை… இதைத்தான் மோடி & அமித்ஷா எதிர்பார்த்தனர்!
“ராணுவம் என் அப்பன் வீட்டுச் சொத்து இல்லை – ஆனால் உங்கள் அப்பன்தான் ராணுவக் கப்பலில் குடும்ப சகிதம் பிக்னிக் போனார்”- என்று செமத்தியான மடக்கு!
அதேபோல் ஆயிரம் BJP Rally நடத்தி பஞ்சாப் – ஹரியானாவில் சீக்கிய மக்களிடையே ஏற்படுத்தி இருக்க வேண்டிய ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ உணர்வை… சாம் – பிட்ரோடா ஒரே வார்த்தையில் சீக்கியர்களை காங்கிரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்!
“1984 ல் இந்திரா கொல்லப்பட்டதும் சீக்கியருக்கு எதிரான கொலைவெறிக் கலவரம்?”
“84 ல் எப்பவோ நடந்தது – ஆமா, அதுக்கு என்ன இப்போ?!
சாம் பிட்ரோடாவின் பேட்டி BJP க்கு எதிர்பாராமல் கிடைத்த போனஸ்! இனி கேப்டன் அமரீந்தர் சிங்கே முயற்சித்தாலும் டெல்லி – ஹரியானா – பஞ்சாபில் காங்கிரசைக் காப்பாற்ற முடியாது!
மோடி விரித்த பிரசார வலையில் – ராணுவத்தின் சாதனைகள், பயங்கர வாதத்தை ஒடுக்குதல், சூரியக் கதிர் தாங்குதல் etc.. – வசமாக வந்து சிக்கியது காங்கிரஸ்!
- முரளி சீதாராமன் – Murali Seetharaman