தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு கட்டத் தேர்தல்தான் மீதமுள்ளது. வரும் 19ம் தேதி அதுவும் முடிந்து, மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்தத் தேர்தலில், பாஜக., காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகளும் மாநிலங்களில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், சில மாநிலக் கட்சிகள் தனித்தே தேர்தலை சந்தித்தன.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக., காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது, திமுக., தலைவர் ஸ்டாலின் தான் மத்தியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதற்கு முன்னர் காங்கிரஸுடன் ஒட்டிக்கோ கட்டிக்கோ என உலா வந்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, ஸ்டாலினை சந்தித்து கூட்டணி, பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் பேசியதாகக் கூறப் பட்டது.
ஆனால் அதை ஏற்காமல், ஸ்டாலின் தன்னிச்சையாகவே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில், அதுவரை கூட்டணியில் உறுதியாக நின்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச மாயாவதி என பிரதமர் பதவியில் கண் வைத்திருந்தோர் எல்லாம் கூட்டணியை விட்டுக் கழன்று கொண்டு, தனித்தே தேர்தலை சந்தித்தனர். இதனால் ஸ்டாலினுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தமுறை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், பெரும்பான்மையைக் கைப்பற்ற வாய்ப்பு குறைவு என்று கூறப் படுவதால், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தேர்தலுக்கு பிந்தைய மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவர் அண்மையில் மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்), பினராயி விஜயன் (கேரள முதல்வர்) ஆகியோரை சந்தித்து ஆலோசித்தார்.
இந்நிலையில்தான் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இன்று சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்தார். மாலை 4.30 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு, சந்திரசேகர ராவ் வரவேண்டும் என்று ஸ்டாலின் வற்புறுத்தினாராம். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியையும், சந்திரசேகர ராவ் சந்திக்கவுள்ளார்.