அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்ற கமல்ஹாசன், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டியில் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் கோட்சே என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தாம் பேசிக் கொண்டிருப்பது இஸ்லாமியர்கள் மத்தியில் என்பது தெரிந்தும், வேண்டுமென்றே, தாம் இஸ்லாமியர்கள் மத்தியில் நின்றுகொண்டு பேசுவதால் அவ்வாறு கூறவில்லை, காந்தி சிலைக்கு எதிரே நின்று கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுவதாகவும் பேசினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீதான வழக்கை மே16 இல் விசாரிப்பதாக தில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், கமலுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. வழக்குகள் பதிவு செய்யவும் தயாராகிவருகின்றனர்.