பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை தமிழகத்தை கடந்து கர்நாடகா எல்லைக்குள் சென்றது.
கடந்த 12 நாட்களாக ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை கர்நாடக எல்லையைக் கடந்தது.
பெங்களூர் நகரிலுள்ள ஈ.ஜி.புரா என்ற பகுதியில் நிறுவப்படுவதற்காக 108 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் செதுக்கப்பட்டது.
கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடை, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல் வெட்டி எடுக்கப்பட்டு கோதண்ட ராமர் சிலைக்கு, முகம் கைகள் மட்டும் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2018 டிசம்பரில், 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட சரக்கு லாரியில் கோதண்ட ராமர் சிலை ஏற்றப் பட்டு பெங்களூருக்குக் கொண்டு செல்ல புறப்பட்டது.
ஆனால் சிலையைக் கொண்டு செல்லும் போது, வழியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இது மிகப் பிரமாண்ட சிலை என்பதாலும், மிகப் பெரும் லாரி என்பதாலும் சாலையின் பல்வேறு இடங்களில் தடங்கள் ஏற்பட்டது. சில இடங்களில் கட்ட்டங்கள் தட்டின. கட்டடங்கள் உடைக்கப்படும் சூழல் பல இடங்களில் ஏற்பட்டது.
இந்தப் பணிகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிகின்ற நேரத்தில், ஆங்காங்கே லாரியை நிறுத்தி, சிலைக்கு அந்த அந்த ஊர் மக்கள் பூஜைகளைச் செய்தனர். இதன் பின்னர் ஒவ்வொரு இடமாக நின்று நின்று மெதுவாக தனது பயணத்தைத் தொடர்ந்த கோதண்ட ராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி
என்னுமிடத்தில் கடந்த 12 நாட்களாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தது.
இந்நேரம், பேரண்டப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் மீது உள்ள உயர்மட்ட தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது 380 டன் எடையுடைய சிலை செல்ல நெடுஞ்சாலை துறை அனுமதி மறுத்தது. இதனால், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்தப் பணி நிறைவடையும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்காலிக மண்சாலை அமைக்கும் பணியிலும் தடங்கல் ஏற்பட்டது!
இந்நிலையில் தொடர்ந்து வெயில் இருந்ததால், ஆற்றில் மண் காய்ந்து, நேற்று ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணி முழுமை அடைந்தது. இதனை அடுத்து, நேற்று நள்ளிரவில் கோதண்டராமர் சிலை பேரண்டப்பள்ளியிலிருந்து கிளம்பி, ஓசூரைக் கடந்தது.
இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, கோதண்டராமர் சிலை ஓசூர் வழியாக கர்நாடக எல்லையை அடைந்தது. தொடர்ந்து, கர்நாடகா எல்லையான
அத்திபெலே பகுதியை அடைந்தது கோதண்டராமர் சிலை.
இந்நிலையில் இன்று இரவுக்குள் கோதண்டராமர் சிலை பெங்களூர் பகுதிக்கு சென்றடையும் என்று கூறப் படுகிறது. பல்வேறு சிக்கல்களைக் கடந்து, ஆன்மிக பூமியான தமிழகத்தின் மண்ணில் இருந்து பெங்களூருக்கு கோதண்டராமர் சிலை கொண்டு செல்லப் படுவது பெரும் பாக்கியம் என்கின்றனர் கர்நாடகத்தினர்.